

தூத்துக்குடி உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு கிடைத்த நிலையில், பதநீரில் 60-70% வெள்ளைச் சர்க்கரை கலந்து போலி கருப்பட்டி தயாரித்து, அசல் என கூறி விற்பனை செய்து ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த 5 வியாபாரிகளுக்கு 38 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அசல் கருப்பட்டியின் சுவை, நிறம், உறுதி, உடையும் தன்மை, பானங்களில் கரையும் விதம் மூலம் போலியை எளிதில் கண்டறியலாம்.
பதநீருடன் வெள்ளைச் சர்க்கரை கலந்து விற்கப்படும் போலி கருப்பட்டி (palm jaggery) மற்றும் அதன் அடையாளம் காணும் முறைகளைப் பற்றி தெரிந்துத் கொண்டால் வாங்கி ஏமாறாமல் இருக்கலாம்.
பதநீரில் 60 முதல் 70 சதவிகிதம் வரை சீனி கலந்து போலி கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் சர்க்கரைக் கலந்து கருப்பட்டி தயாரித்து, அதனை அசல் கருப்பட்டி என்று கூறி ரூபாய் 6 கோடி வரை விற்பனை செய்து மோசடி செய்யப்பட்டுள்ளது. இப்படி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்ததற்காக உடன்குடியைச் சேர்ந்த வரி ஏய்ப்பில் ஈடுபட்ட 5 வியாபாரிகளுக்கு ஜி.எஸ்.டி அதிகாரிகள் ரூபாய் 38 கோடி அபராதம் விதித்துள்ளனர்.
சர்க்கரை கலக்கப்பட்ட கருப்பட்டிக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டும். ஆனால், அசல் கருப்பட்டி என ஏமாற்றி 5 சதவீத வரியை மட்டுமே செலுத்தி முறைகேடு செய்துள்ளனர்.
1) கற்பகத்தரு:
கற்பகத்தரு எனப்படும் பனை மரங்கள் நிறைந்த தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் தயாரிக்கப்படும் உடன்குடி கருப்பட்டிக்கு அக்டோபர் மாதம் 2023 ஆம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
உடன்குடி கருப்பட்டிக்கு உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பனைத் தொழிலில் ஈடுபட்டு கருப்பட்டி, பனங்கற்கண்டு தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். கருப்பட்டி (palm jaggery) தயாரிப்பு முதல் அதை அடைத்து விற்கும் பெட்டி வரை அனைத்திற்கும் பனை சார்ந்த பொருட்களே பயன்படுத்தப்படுவதால் உடன்குடி கருப்பட்டிக்கு அதிக வரவேற்பு உள்ளது. அசல் கருப்பட்டிக்கு வரி விலக்கு உண்டு.
பதநீரில் இருந்து தயாரிக்கப்பட்டு சர்க்கரை கலக்கப்படாமல் இருந்தால் மட்டுமே அது பனங்கருப்பட்டி என்றும், ஒரு சதவிகிதம் சர்க்கரை கலக்கப்பட்டாலும் அது கலப்படமாகக் கருதப்படும் என்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
2) அசல் மற்றும் போலி கருப்பட்டியை அடையாளம் காண்பது எப்படி?
அசல் கருப்பட்டியைக் கடித்து மெல்லும்பொழுது கரிப்புத் (உப்பு) தன்மையுடன் கூடிய இனிப்புச்சுவை இருக்கும். போலி கருப்பட்டியில் சர்க்கரையின் சாதாரண இனிப்புச் சுவை மட்டுமே இருக்கும்.
அசல் கருப்பட்டியை உடைத்தால் கருப்பு மற்றும் பழுப்பு நிறம் கலந்த மங்கலான தோற்றம் இருக்கும். ஆனால், போலி கருப்பட்டி உட்புறம் பளபளப்பாக காணப்படும்.
அசல் கருப்பட்டி கல்லு போன்ற உறுதித் தன்மையுடன் மாறாமல் இருக்கும். ஆனால், போலி கருப்பட்டியோ சில வாரங்களிலேயே ஈரப்பதமாகி இளக ஆரம்பித்து விடும்.
கருப்பட்டியின் அடிப்பாகம் தரையில் தட்டிப் பார்க்கும்போது மிதமான சத்தம் கேட்டால் அது அசல். அதிக சத்தம் கேட்டாலோ அது போலி எனக் கண்டு கொள்ளலாம்.
கருப்பட்டியைப் பொறுத்தவரை அசலாக இருந்தால் அவற்றை காபி, தேநீரில் கலக்கும் போது இனிப்புச் சுவை நன்கு தெரிவதற்கு அதிக அளவில் போட வேண்டியிருக்கும். அசல் கருப்பட்டியை சாப்பிட்டால் லேசான இனிப்பு சுவை மட்டுமே இருக்கும். அதுவே கருப்பட்டி போலியானதாக இருந்தால் வாயில் போட்டாலே அதிக இனிப்பு தெரியும். இதை வைத்துக் கண்டறியலாம்.
அசல் கருப்பட்டியை உடைத்தால் ஒரே வடிவத்தில் உடையாது. வெளியில் கடினமாக இருக்கும். உள்ளே மாவு போல இருக்கும். கருப்பட்டியில் அதிக அளவு சர்ககரை கலந்திருந்தால் ஒரே வடிவத்தில் உடையும். இனிப்பு சுவையும் அதிகம் இருக்கும்.
3) பனங்கருப்பட்டியின் நன்மைகள்:
கருப்பட்டி (palm jaggery) சிறந்தது. உடலுக்கு நல்லது. இதில் இரும்புச் சத்து உட்பட பல்வேறு தாது சத்துக்கள் உள்ளன.
இதில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து உடலில் ரத்தத்தை அதிகரிக்க உதவுகிறது.
வயிறு தொடர்பான பிரச்சனைகளைக் குறைத்து, செரிமானத்தை சீராக்கி பசியைத் தூண்டக்கூடியது.
கால்சியம் சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாகும்.
தொண்டை வலி மற்றும் நுரையீரல் பாதிப்புகளுக்கு இது நல்ல மருந்தாகிறது.
வேலை செய்து களைப்படைந்த உடலுக்கு உடனடியாக ஆற்றலைத் தரக்கூடியது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளதால், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி உடல் எடையை குறைக்க உதவுகிறது.
பருவமடைந்த பெண்களுக்கு கருப்பட்டியுடன் உளுந்து சேர்த்து களி செய்து கொடுப்பது வழக்கம். இது கருப்பையை வலுவாக்கவும், மாதவிடாய் கால வயிற்று வலிகளைக் குறைக்கவும் உதவுகிறது.
4) கலப்பட கருப்பட்டி உடலுக்கு கேடு விளைவிக்குமா?
சர்க்கரை கலந்த கருப்பட்டியை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். இதைத் தொடர்ச்சியாக சாப்பிடும்போது எடை கூடும். இதயநோய் தொடர்பான பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கலப்பட கருப்பட்டி தயாரிக்கும் பொழுது நிறத்திற்காக நிறமிகள் சேர்க்கப்பட்டால் அவை சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இனி பதநீருடன் வெள்ளைச் சர்க்கரை கலந்து விற்கப்படும் போலி கருப்பட்டி வாங்கி ஏமாறாமல் இருக்கலாம் மக்களே!
உணவுப் பொருட்களில் உள்ள கலப்படங்களை நம்பகத்தன்மையுடன் அடையாளம் காணும் விழிப்புணர்வைப் பெறுவதன் மூலமாக, உங்கள் குடும்பத்திற்குத் தூய்மையான மற்றும் சத்தான பாரம்பரிய உணவை உறுதிப்படுத்த முடியும்.
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.
Reference