

"கடவுள் ஒருநாள் உலகைக் காணத் தனியே வந்தாராம்; கண்ணில் கண்ட மனிதரை எல்லாம் 'நலமா?' என்றாராம்."
பண்பலையில் பாடல் ஒலிக்க, வாசலில் அழைப்பு மணி ஒலித்தது. சென்று பார்த்தால், "அட... மெய்யாலுமே கடவுள்!"
ஆச்சரியத்தில், "அப்பா... இங்க வாங்க, கடவுள்!" என்றேன்.
எட்டிப் பார்த்தவர், "ஏதேனும் கோவிலுக்கு நேர்ந்திருப்பார். காசு போட்டு அனுப்பு," எனக் கூறிச் சென்று விட்டார்.
"அக்கா... இங்கே வாயேன், கடவுள்!" என அழைத்தேன். ஹால் வரை வந்தவள், மீண்டும் அவள் அறைக்குச் சென்று மொபைலை எடுத்து வந்தாள். அவருடன் நின்று செல்பி எடுத்து, முகநூலில் போஸ்ட் பண்ணுவதில் மும்முரமானாள்.
அண்ணனிடம் சென்று கடவுள் வருகையை அறிவித்தேன். அவனும் வந்தான், பார்த்தான். "உங்க ஆதார் அல்லது பான்கார்டு இருந்தால் தான் நம்பி உள்ளே விட முடியும்," என வழிமறித்துக் கேட்க, அவர் திருதிருவென முழித்தார்.
கடைசியாக கிச்சன் சென்று, "அம்மா... வாசலில் கடவுள் நிற்கிறார்..." என்று முடிப்பதற்குள் விடுவிடுவெனச் சென்றாள். கைகூப்பி, "பெருமாளே! (அவளே கடவுளுக்குப் பெயரும் வைத்துவிட்டாள்) உள்ளே வாரும். நீர் வெகு தொலைவிலிருந்து வந்திருப்பீர், பசிக்கும். சாப்பிட வாரும்," என அவர் கைபிடித்துக் கூட்டிச் சென்றாள். டைனிங் டேபிள் முன் அமர வைத்து, தட்டில் சாதம் பரிமாறினாள்.
சேயின் பசியறியும் அந்தத் தாய் உள்ளம் கண்டு வியப்பின் எல்லைக்கே போய்விட்டேன். "இதுதான் அம்மா... அம்மா என்றால் அன்பு!" என்றேன்.
திடீரென சடார் என்று ஒரு சப்தம்! சுரீர் என்று முதுகில் வலி!
"மணி எட்டு... இன்னும் என்ன தூக்கம்? எழுந்திரு!" எனத் திட்டிய அம்மா, இப்போது காளியாய் நின்றாள்.
"இதுவும் அம்மா தான். அம்மா என்றால் அடி!"