

அந்த காலத்தில் சில நூறுகளில் இருந்த தங்கம் அதன் பின் ஆயிரங்களில் சென்று தற்போது லட்சத்தில் வந்து நிற்கிறது. மணப்பெண்ணுக்கு குண்டுமணி தங்கமாவது போட்டால் தான் அந்தஸ்து அல்லது கௌரவம் என்று நினைக்கும் பாரம்பரியத்தில் வந்தவர்கள் இந்தியர்கள் என்பதால் தங்கம் வாங்குவதில் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் முன்னணியில் உள்ளனர் என்கிறது ஒரு தகவல்.
தங்கத்தில் சேமிப்பு என்பது மருத்துவம் போன்ற அவசர காலத் தேவைகளுக்காகவும், கல்வி, வீடு கட்டுதல் போன்ற முக்கியமான தேவைகளுக்காகவும் பயன்படுவதை அறிவோம். வறியவர்கள் முதல் பணக்காரர்கள் வரை அவரவர் வசதிக்கு தகுந்தார் போல் வாங்கும் தங்கம் ராக்கெட் உயரத்தில் பறப்பது ஏன்?
எட்டாத அளவுக்கு உயரே செல்லும் தங்கத்தை இனி அனைவராலும் வாங்க முடியுமா? தங்கத்தில் முதலீடு என்பது பாதுகாப்பானதா? தங்கம் விலை ஏற்றம் குறித்த ஒரு சிறு பார்வை இங்கு..
இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி கண்டுள்ளதாகவும், இதன் தாக்கம் தங்கம் விலை உயர்விலும் எதிரொலித்து ரூ.1 லட்சத்தை தொடும் என்ற செய்தி மக்களை திக்குமுக்காட வைத்தது.
தங்கம் விலை ஏற்றம் என்பது ஒரே நேரத்தில் உயர்ந்ததில்லை. உலக பொருளாதாரம், அரசியல், போர்கள், பணவீக்கம் போன்ற காரணங்களால் பல கட்டங்களாக உயர்ந்து வந்துள்ளது. பழங்காலத்தில் அரசர்களின் செல்வம், நாணயம், வர்த்தகம் ஆகியவற்றின் அடையாளமாக விளங்கிய தங்கத்தின் மதிப்பு நிலையானதாக இருந்தது.
காலம் சென்றது. Gold Standard காலம் எனப்படும் 1944 களில் Bretton Woods ஒப்பந்தம் காரணமாக அமெரிக்க டாலருடன் தங்கம் இணைக்கப்பட்டு 1 அவுன்ஸ் தங்கம் = $35 என்ற நிலையான விலையைப் பெற்று பல ஆண்டுகள் விலை உயர்வு இல்லை என குறிப்புகள் கூறுகிறது.
1971 ல் அமெரிக்கா Gold Standard-ஐ ரத்து செய்தது பெரிய திருப்பமாக அமைந்து சந்தை அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு அடுத்த 10 ஆண்டுகளில் பல மடங்கு உயர்வு பெற்றதாக கூறப்படுகிறது.
1980களில் வந்த எண்ணெய் நெருக்கடி , பணவீக்கம் (Inflation), போர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக மாற்றி, விலையில் பெரிய உச்சம் தொட்டது. அதன் பிறகான 1990–2000 ஆண்டுகளில் சீரான பொருளாதாரம் இருந்த நிலையில் பங்குச் சந்தை வளர்ச்சி மூலம் தங்க விலை மெதுவாக குறைந்து நிலைத்தது.
2008 காலகட்டத்தில் உலக பொருளாதார நெருக்கடி, வங்கிகள் வீழ்ச்சி , பங்குச் சந்தை சரிவு காரணமாக மக்கள் தங்கத்தை சேமிக்க, தங்க விலை வேகமாக உயர்வு கண்டது. அதன் பின்னர் 2020ல் ஏற்பட்ட கடுந்தொற்றான கொரோனா காலத்தில் உலகம் முழுவதும் லாக்டவுன் ஏற்பட்ட நிலையில் பண அச்சிடுதல் (Money Printing) நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு நிமித்தம் உச்ச விலை தொட்ட தங்கம் தற்போதைய ஆண்டுகளில் (2025) ரஷ்யா–உக்ரைன் போர், மத்திய கிழக்கு பதற்றம் , டாலர், வட்டி விகித மாற்றங்கள் போன்ற பல காரணங்களால் ராக்கெட் போல உயரே செல்கிறது.
பொதுவாக பார்க்கும்போது எதிர்காலத்தில் தங்கம் விலை உலக பொருளாதாரம் மற்றும் போர், நெருக்கடி மாற்றங்களுக்கேற்ப ஆண்டுகள் தோறும் ஏறிக் கொண்டுதான் இருக்கும் என்கின்றனர் வல்லுநர்கள்.
இனி நாம் என்ன செய்வது? தங்கத்தின் மீதான முதலீடு சரியா? சந்தேகமே வேண்டாம். தாராளமாக தங்கத்தை சேமிக்கலாம். ஆனால் கவனமாக தகுந்த பாதுகாப்பான வழிகளில் Practical Strategy எனப்படும் யதார்த்த நிலைக்கேற்ப சேமிப்பது புத்திசாலித்தனம்.
ஒரே நாளில் அதிகமாக வாங்குவதை விட மாதந்தோறும் சிறு தொகை (SIP மாதிரி) தந்து சேமிப்பது, விலை குறையும் போது வாங்குவது, வசதிக்கேற்ப பணத்தை இரட்டிப்பாகும் நீண்டகாலம் மற்றும் தேவைக்கு வங்கியில் வைக்கும் பொருட்டு குறைந்த கால திட்டங்கள் என தகுந்த ஆலோசனையுடன் சேமிப்பது பாதுகாப்பானது. குறிப்பாக மொத்த சேமிப்பில் 10% – 20% மட்டும் தங்கத்தில் போடுவது நல்லது என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
விலை உயரும் தங்கம் ஒருபோதும் மதிப்பில் “zero” ஆகாது. வாழ்க்கை பாதுகாப்பு என்பது உண்மையே என்றாலும் அதிகமாக வீடுகளில் வைத்திருப்பது ஆபத்தை தரும் என்பதையும் கவனத்தில் கொள்வது நல்லது.