
இந்தியாவின் பெரும் செல்வந்தர்களில் முகேஷ் அம்பானி , கவுதம் அதானி ஆகியோரை தொடர்ந்து அடுத்த இடத்தில் உள்ளார் ரோஷினி மல்ஹோத்ரா. இதன் மூலம் நாட்டின் பெரும் செல்வந்த பெண்மணி என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார். இவர் நாட்டின் பெரும் பணக்காரரும் HCL நிறுவனத் தலைவருமான ஷிவ் நாடாரின் ஒரே மகள். இவர் 1982 ஆம் ஆண்டில் ஷிவ் நாடாருக்கும் கிரணுக்கும் மகளாக பிறந்தார். புது டெல்லியில் உள்ள வசந்த் வேலி பள்ளியில், பள்ளி படிப்பை முடித்த ரோஷினி நாடார் அமெரிக்காவில் இளங்கலை படிப்பை படித்து முடித்தார்.
அதன் பிறகு அமெரிக்காவின் வடமேற்கு பல்கலைக்கழகத்தின் கெல்லாக் மேலாண்மைப் பள்ளியில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் (MBA) பெற்றார். மேலும் அமெரிக்காவின் இல்லினாய்ஸில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்புகளில் இளங்கலைப் பட்டமும் பெற்றுள்ளார். பின்னர் பல்வேறு நிறுவனங்களில் இவர் வேலை பார்த்துள்ளார். அதன் பிறகு ஷிவ நாடார் அறக்கட்டளையின் தலைவராக பதவி ஏற்றார். பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களை முன்னேற்றும் வித்யாக்யான் லீடர்ஷிப் அகாடமியின் தலைவராகவும் இருந்துள்ளார்.
நிலையான சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்கி இயற்கை வாழ்விடங்கள் மற்றும் பூர்வீக உயிரினங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட 'தி ஹேபிடேட்ஸ்' அறக்கட்டளையை ரோஷினி நாடார் உருவாக்கியுள்ளார். ஷிவ் நாடார் அறக்கட்டளை மூலம் பல சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இவர் எம்ஐடி ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங்கில் முதல்வர் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும், கெல்லாக் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் ஆசியாவிற்கான நிர்வாகக் குழு உறுப்பினராகவும் தற்போது உள்ளார்.
ரோஷினி நாடார் உலகளவில் பல செல்வாக்கு மிக்க பதவிகளையும் வகித்து வருகிறார். அமெரிக்க-இந்தியா மூலோபாய கூட்டாண்மை மன்றத்தின் (USISPF) வாரிய உறுப்பினராக உள்ளார். மேலும் இயற்கை பாதுகாப்பு (TNC) வாரியத்திலும் பணியாற்றுகிறார். தற்போது HCL டெக்னாலஜிஸின் தலைவராக பணியாற்றி வருகிறார். 2010 ஆம் ஆண்டு HCL ஹெல்த்கேரின் துணைத் தலைவராக இருந்த ஷிகர் மல்ஹோத்ராவை ரோஷினி மணந்தார். அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
வயதின் காரணமாக HCL நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற ஷிவ் நாடார் முடிவு செய்தார். அதன்படி ஷிவ் நாடார், HCL கார்ப்பரேஷன் மற்றும் வாமா டெல்லியில் உள்ள தனது 47% பங்குகளை தனது மகள் ரோஷினிக்கு வழங்கியுள்ளார். ரோஷினி தனது தந்தையின் பங்குகளை பெற்ற பிறகு, HCL கார்ப்பரேஷனின் மிகப்பெரிய பங்குதாரராக மாறினார். இது ஒரு பெரிய இந்திய ஐடி நிறுவனத்தில் அவருக்கு பெரும்பான்மையான கட்டுப்பாட்டு அதிகாரங்களை வழங்குகிறது. இதன் மூலம் அவர் இந்தியாவின் அதிக சொத்துக்களை கொண்ட பணக்கார பெண்மணி ஆகியுள்ளார்.
செல்வந்தராக மட்டும் இல்லாமல், நிறைய கொடைகளையும் வழங்கியுள்ளார் ரோஷினி மல்ஹோத்ரா. இதற்காக 2014 ஆம் ஆண்டு NDTV வழங்கிய இளம் கொடையாளர் விருதை பெற்றுள்ளார். 2017 ஆம் ஆண்டு வோக் இந்தியா, ஆண்டின் சிறந்த கொடையாளர் விருதை அவருக்கு வழங்கியுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் உலகின் 100 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் 60வது இடத்தைப் அவர் பிடித்தார். அதே ஆண்டில் ஃபார்ச்சூன் இதழில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் 72 வது இடத்தைப் பிடித்தார்.