தார் பாலைவனத்தில் ஒரு ‘தையல்’ புரட்சி: ருமா தேவியின் சாதனைப் பயணம்!

"வாய்ப்புகள் தேடி வரும் என்று காத்திருக்காதீர்கள், உங்களிடம் உள்ள திறமையையே வாய்ப்பாக மாற்றுங்கள்" என்பதுதான் ருமா தேவியின் தாரக மந்திரம்.
Ruma Devi | rural women success story
Ruma Devi | rural women success storyImage credit: hindi.oneindia
Published on
Mangayar Malar
Mangayar Malar

ஒரு சாதாரண ஊசியும் நூலும் கொண்டு ஒரு பெண்ணால் தன் தலையெழுத்தையே மாற்றி எழுத முடியுமா? முடியும் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார் ராஜஸ்தானின் தார் பாலைவனத்தைச் சேர்ந்த ருமா தேவி. வறுமை மற்றும் சமூகத் தடைகளைத் தகர்த்து, இன்று 30,000 கிராமப்புறப் பெண்களுக்கு (rural women success story) வாழ்வாதாரம் வழங்கும் ஒரு மாபெரும் ஆளுமையாக அவர் உயர்ந்துள்ள கதை, ஒவ்வொரு பெண்ணும் படிக்க வேண்டிய ஒரு பாடமாகும்.

சவால்கள் நிறைந்த இளமை வாழ்வு:

1988-ல் ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் ருமா தேவி பிறந்தார். நான்கு வயதிலேயே தாயை இழந்த அவருக்கு, வறுமை நிழல் போலவே தொடர்ந்தது. எட்டாம் வகுப்புடன் பள்ளிப்படிப்பு முடங்கியது. 17 வயதில் திருமணமானபோது, புகுந்த வீட்டிலும் வறுமையே மிஞ்சியது. முறையான மருத்துவ வசதி இல்லாததால் தனது முதல் குழந்தையை இழந்தது அவரைப் பெரிதும் பாதித்தது. இந்தத் துயரம் அவரைப் பொருளாதார ரீதியாகத் தன்னிறைவு அடைய வேண்டும் என்று தூண்டியது. அவரிடம் இருந்த ஒரே சொத்து, அவரது பாட்டி சொல்லிக் கொடுத்த பாரம்பரிய எம்பிராய்டரிக் கலை மட்டுமே.

கனவின் விலை:

ருமா தேவி தனது வறுமையை வெல்ல வேலை செய்ய விரும்பினார். ஆனால், அவர் வாழ்ந்த பழமைவாதச் சமூகம் ஒரு பெண் வெளியே சென்று வேலை செய்வதையோ, தொழில் நடத்துவதையோ ஏற்கவில்லை. பெண்கள் 'குங்கட்' (Ghunghat) எனும் முகத்திரை அணிந்து வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பது அந்த ஊரின் விதி. சமூகக் கட்டுப்பாடுகளை மீறுகிறாள் என்ற காரணத்திற்காக அவர் தனது வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதையும் படியுங்கள்:
பொம்பள புள்ள மாதிரி இரு! - இந்த அட்வைஸ் இனி செல்லுபடி ஆகாது! ஏன் தெரியுமா?
Ruma Devi | rural women success story

1,000 ரூபாயில் தொடங்கிய ஒரு புரட்சி:

2006-ல் ருமா தேவி எடுத்த ஒரு முடிவு, ஒரு மாபெரும் மாற்றத்திற்கு வித்திட்டது. தனது கிராமத்தைச் சேர்ந்த 10 பெண்களை ஒருங்கிணைத்தார். ஒவ்வொருவரும் தலா 100 ரூபாய் சேர்த்து, மொத்தம் 1,000 ரூபாயில் ஒரு பழைய தையல் இயந்திரத்தை வாங்கினார்கள். தனி ஆளாகப் போராடாமல் ஒரு குழுவாகச் செயல்பட்டது அவர்களுக்குப் பலம் தந்தது.

தார் பாலைவனத்தின் கடும் வெப்பம், தண்ணீர் தட்டுப்பாடு, அக்கம் பக்கத்தினரின் கேலிப் பேச்சுகள் என அத்தனை தடைகளையும் தாண்டி அவர்கள் தைத்த குஷன்களும், ஆடைகளும், பைகளும் உள்ளூர் சந்தையில் கவனம் ஈர்த்தன. 2010-ல் ‘ஜி.வி.சி.எஸ்’ (GVCS) எனும் அமைப்பின் தலைவரான பிறகு, பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாகச் சந்தைப்படுத்தினார். இது கலைஞர்களுக்குத் தகுதியான லாபத்தைப் பெற்றுத்தந்தது.

சர்வதேச மேடைகளில் ராஜஸ்தானி கலை:

ருமாதேவியின் வெற்றியின் ரகசியம் அவரது படைப்பாற்றலாகும். கிராமப்புற எம்பிராய்டரிக் கலையை நவீன ஃபேஷன் உலகிற்கு ஏற்ப மாற்றினார். இதன் விளைவாக, ராஜஸ்தானின் எம்பிராய்டரி ஆடைகள் லண்டன், ஜெர்மனி, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் ஃபேஷன் ஷோக்களில் அணிவகுத்தன.

2020-ல் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு கிராமத்துப் பெண்ணாக அவர் ஆற்றிய உரை இந்தியாவையே வியக்க வைத்தது. அதேபோல், 'கௌன் பனேகா குரோர்பதி' மேடையில் அமிதாப் பச்சனுடன் அமர்ந்து தனது போராட்டங்களைப் பகிர்ந்து கொண்டது உலக அளவில் அவரைப் பிரபலமாக்கியது.

அங்கீகாரமும் வாழ்வாதாரமும்:

பெண் முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றிய பணிகளைப் பாராட்டி, இந்திய அரசு அவருக்கு 2018-ல் ‘நாரி சக்தி புரசுகார்’ விருதை வழங்கியது. தொடர்ந்து அவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இன்று 75-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 30,000 பெண்கள் இவரால் பொருளாதார சுதந்திரம் பெற்றுள்ளனர். ஆயிரக்கணக்கான குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல இவரே மறைமுகக் காரணமாக இருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
இந்தியப் பங்குச்சந்தையை அதிரவைக்கும் பெண் முதலீட்டாளர்கள்..!
Ruma Devi | rural women success story

நம்பிக்கை நட்சத்திரம்:

"வாய்ப்புகள் தேடி வரும் என்று காத்திருக்காதீர்கள், உங்களிடம் உள்ள திறமையையே வாய்ப்பாக மாற்றுங்கள்" என்பதுதான் ருமா தேவியின் தாரக மந்திரம். எந்தச் சமூகம் அவரை ஒரு காலத்தில் ஒதுக்கியதோ, அதே சமூகம் இன்று அவரைத் தனது அடையாளமாகக் கொண்டாடுகிறது. ருமா தேவி வெறும் ஆடை வடிவமைப்பாளர் மட்டுமல்ல; கனவுகளைத் துரத்திப் பிடிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ருமாதேவி ஒரு நம்பிக்கை நட்சத்திரம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com