

இங்கிலாந்தைச் சேர்ந்த சாரா மலாலி (Sarah Mullally), 106 ஆவது பேராயராக ஜனவரி 28, 2026 இல் கிறிஸ்துவ மதத்தில் உயர்ந்த அந்தஸ்தைக் குறிக்கும் பதவியை ஏற்கவிருக்கிறார். இது இங்கிலாந்து தேவாலய அமைப்பின் முக்கிய பதவியாகும். கடந்த 1400 வருடங்களாக 105 ஆண்கள் இருந்த பேராயர் பதவியில், 106 ஆவதாக பதவியேற்கும் முதல் பெண்மணி சாராமலாலி ஆவார். ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த மரபை உடைத்த முதல் பெண்மணி சாரா மலாலி.
சாரா மலாலி, இங்கிலாந்திலுள்ள சர்ரே மாகாணம், வோக்கிங்கிலுள்ள எளிய குடும்பத்தில் பிறந்தவர். மருத்துவராக விரும்பாமல், செவிலியர் படிப்பை தேர்ந்தெடுத்தவர். செவிலியர் பணியை இறைவனுக்கு செய்யும் சேவையாக கருதினார். அவர் வேலை செய்த ஸெயின்ட் தாமஸ் மருத்துவமனையில், அனைவரும் அறிந்த சிறந்த சேவகியாக திகழ்ந்தார்.
ஹெல்த்கேர் சம்பந்தமான மேற்படிப்பையும் படித்து, தலைமை செவிலியராக செல்சியா அண்ட் வெஸ்ட் மின்ஸ்டர் மருத்துவ மனையில் பணி செய்து, இங்கிலாந்திலேயே பிரபலமான செவிலியராக விளங்கினார்.
மனதிற்கு பிடித்த செவிலியர் பணியை மேற்கொண்டிருந்தாலும் கூட, தேவாலயத்தில் சேர்ந்து இறைப்பணியை மேற்கொள்ள வேண்டும் என்பது அவர் விருப்பமாக இருந்து வந்தது. இங்கிலாந்திலுள்ள பல தேவாலயங்களில் பணிபுரிய ஆரம்பித்த பின், முழு நேர தேவாலயப் பணிகளில் ஈடுபட்டார்.
சாரா மலாலி (Sarah Mullally), இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை மையத்தின் தலைமை நர்சிங் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். மேலும், போர்டு ஆஃப் நர்சிங்கிலும் உயர்ந்த பதவியை வகித்தார். 2001 ஆம் ஆண்டு, கென்ட் பல்கலைக் கழகத்தில், இறையியல் பட்டப்படிப்பு, 2006 ஆம் வருடம் ஹேர் ரோப் கல்லூரியில் ஆயர் (பிஷப்) இறையியல் பாடத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார்.
ஜூலை 22, 2015 ஆம் வருடம், கிரீடிசனின் பிஷப்பாக பதவியேற்ற சாரா மலாலி, இங்கிலாந்தின் தேவாலயங்களில் பதவி நியமனம் செய்யும் முதல் பெண் அதிகாரியாக விளங்கினார். லண்டன் பிஷப்பாக பதவியேற்றார். சாரா மலாலியை, கான்டர்பரியின் 106 ஆவது பேராயராக இங்கிலாந்து தேவாலய அமைப்பு அறிவித்து இருப்பது பாராட்டுக்குரிய விஷயமாகும். சாரா மலாலியின் (Sarah Mullally) கணவர் தகவல் தொழில் நுட்பத் துறையைச் சேர்ந்தவர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.
முதல் பெண் பிஷப்பாக (பேராயர்) பதவியேற்கவிருக்கும் சாரா மலாலிக்கு, நல் வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.
