

"அவளுக்கு ரொம்ப திமிரு டீ !"
"என்ன பார்த்தும் பார்க்காம போறா?"
"'டிவில' செய்தி வாசிச்சா பெரிய ஸ்டார் என்கிற நினைப்பு போல...."
இப்படி தன்னுடன் படித்த கல்பனா பற்றி மீனாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் அபிராமி.
15 வருடங்களுக்கு முன்பு கல்பனா, மீனா, அபிராமி மூவரும் ஏழாவது, எட்டாவது வகுப்புகளில் மயிலாப்பூர், பள்ளியில் படித்தவர்கள்.
மீனா தொடர்ந்தாள்...
"அப்படியா? ஒரு நான்கு மாதத்திற்கு முன்பு கல்பனாவை மயிலாப்பூர் பஜாரில் பார்த்தேன்! அங்கே ரொம்ப கூட்டமாக இருந்ததால், தன் காரில் ஏறிக் கொள்ள சொன்னாள். பக்கத்தில் உள்ள பார்க்கில் சென்று இருவரும் அமர்ந்தோம்.
அரை மணி நேரம் அரட்டைக்கு பிறகு Ratna Cafe சென்று டிபன் சாப்பிட்டோம். பேச்சு ரொம்ப இயல்பாக இருந்துச்சு.
எனக்கு அவளை 15 வருடங்கள் பிறகு சந்தித்து பேசியது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு! உனக்கு இப்படி நடந்தது என்று நீ சொல்லும்போது அதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
இருந்தாலும் கல்பனா வீட்டு அட்ரஸ் மற்றும் செல் நம்பர் என்னிடம் இருக்கிறது. இப்ப நான் செல் எடுத்துட்டு வராததனால வீட்டுல போய் அவளிடம் பேசிட்டு உனக்கு போன் பண்றேன். உன் போன் நம்பர் கொடு," என்று மீனா அபிராமியிடம் கேட்டு வாங்கிக் கொண்டாள்.
வரும், வரும் என்று அபிராமி காத்துக் கொண்டே இருந்தாள்...
ஆறு மாதங்கள் ஆகிறது இன்னும் எந்த பதிலும் இல்லை....
சொல்லுவதோடு சரி, யாரும் யாரிடமும் பேசியதாக தெரியவில்லை...
ஒருவருடைய உதவி மற்றவர்களுக்கு தேவையில்லாத போது பேச்சிற்கு இடம் இல்லை போல...
இதுதான் நெக்ஸ்ட் ஜென் போல...