

மங்கலப் பொருட்களிலும், பெண்களின் அழகைக் கூட்டும் அணிகலன்களிலும் வெள்ளிக்கு எப்போதும் தனித்துவமான இடமுண்டு. ஆனால், வாங்கிய புதிதில் வெள்ளி நிலவு போலப் பளபளவென இருக்கும்; வெள்ளி கொலுசோ, மோதிரமோ சில நாட்களிலேயே தன் நிறம் மங்கி, கறுப்பு நிறமாக மாறிவிடுவது பலருக்கும் இருக்கும் ஒரு பெரிய கவலையாகும். இதன் பின்னணியில் ஆச்சரியமூட்டும் வேதியியல் காரணங்கள் ஒளிந்துள்ளன.
வெள்ளி நகைகள் ஏன் கருக்கின்றன? அறிவியல் காரணங்கள்:
1. காற்றுடன் ஏற்படும் வினை (Oxidation & Tarnishing): காற்றில் உள்ள ஹைட்ரஜன் சல்பைடு (Hydrogen Sulfide) வாயுவுடன் வெள்ளி வினைபுரியும் போது, நகையின் மேல் பரப்பில் சில்வர் சல்பைடு (Silver Sulfide) என்ற ஒரு மெல்லிய படலம் உருவாகிறது. இதுவே நகையைக் கருமையாகக் காட்டுகிறது.
2. வியர்வை மற்றும் உடல் நச்சுக்கள்: நமது உடலில் சுரக்கும் வியர்வையில் சல்பர் (கந்தகம்) மற்றும் உப்புத் தன்மை இருக்கும். சிலருக்கு உடல் சூடு அல்லது ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக வியர்வையில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும். இதனால், அவர்கள் போடும் வெள்ளி நகைகள் மற்றவர்களை விட மிக வேகமாகக் கறுத்துவிடும்.
3. அழகுசாதனப் பொருட்கள் (Cosmetics): நாம் பயன்படுத்தும் சென்ட் (Perfumes), பாடி ஸ்ப்ரே, சோப்பு, குளியல் ஷாம்பு, தலைமுடிக்கு வைக்கும் சீரம் மற்றும் மாய்ஸ்சரைசர் க்ரீம்களில் உள்ள ரசாயனங்கள் வெள்ளி நகைகளின் மீது படும்போது அவை விரைவில் நிறம் மங்கத் தொடங்கும்.
4. காற்றில் உள்ள ஈரப்பதம் மற்றும் மாசுபாடு: ஈரப்பதம் (Humidity) அதிகம் உள்ள கடலோரப் பகுதிகள் மற்றும் வாகனப் புகை, தொழிற்சாலைக் கழிவுகளால் காற்று மாசுபட்ட இடங்களில் வசிப்பவர்களுக்கு வெள்ளி நகைகள் சீக்கிரமே கறுத்துப் போகும்.
முக்கியமான உண்மை: தூய வெள்ளி (Pure Silver) அவ்வளவு எளிதில் கறுக்காது. ஆனால், தூய வெள்ளியைக் கொண்டு நகைகள் செய்ய முடியாது (ஏனெனில் அது மிகவும் மென்மையானது). அதனால் நகைகளின் உறுதித்தன்மைக்காக 92.5% வெள்ளியுடன் 7.5% செம்பு (Copper) போன்ற மற்ற உலோகங்கள் கலக்கப்படுகின்றன (இதனை ஸ்டெர்லிங் வெள்ளி – 925 Sterling Silver என்பார்கள்). இதில் கலக்கப்படும் செம்பு காற்றில் உள்ள சல்பருடன் மிக வேகமாக வினைபுரிவதால் தான் நகைகள் கறுக்கின்றன.
ஒரு வெள்ளி நகையைத் துணியில் சுற்றாமல் அப்படியே காற்றோட்டமாக அலமாரியில் வைத்திருந்தால், சில மாதங்களில் அது தானாகவே கறுத்துவிடும். காற்றில் சல்பர் வாயு இருக்கிறது என்பதற்கு இதுவே நேரடி ஆதாரம். வெள்ளி எவ்வாறு சல்பைடுடன் வினைபுரிந்து கருப்பு நிறமாக மாறுகிறது என்பதைப் பல ஆய்வுக் கட்டுரைகள் மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
வெள்ளி கறுத்துப்போவதை வேதியியலில் 'டார்னிஷிங்' (Tarnishing) என்று அழைப்பார்கள். அறிவியல் ஆய்வகங்களில் (Labs) தூய வெள்ளியை ஹைட்ரஜன் சல்பைடு வாயுவின் அருகில் வைக்கும்போது, அது சில நிமிடங்களிலேயே கறுப்பாக மாறுவதை நிரூபித்துக் காட்டியுள்ளனர் வேதியலாளர்கள்.
அன்றாட வாழ்க்கையிலேயே இதற்கான ஆதாரங்களை பார்க்கலாம்: வெள்ளி மோதிரம் அல்லது வளையல் அணிந்து கொண்டு வெங்காயம் நறுக்கினாலோ அல்லது அவித்த முட்டையை உரித்தாலோ நகை உடனே கறுப்பாவதை கவனிக்கலாம். காரணம், வெங்காயம் மற்றும் முட்டையில் சல்பர் (கந்தகம்) மிக அதிக அளவில் உள்ளது. இது நகையில் பட்டவுடன் உடனடியாக வினைபுரிகிறது.
வெள்ளி நகைகள் கறுக்காமல் தடுக்க சில எளிய வழிகள்:
நகைகளைப் பயன்படுத்திவிட்டு கழற்றிய பின், ஒரு மென்மையான துணியால் துடைத்து, காற்றில்லாத ஜிப்லாக் (Zip-lock) கவரில் போட்டு வைக்கலாம்.
குளிக்கும் போதும், நீச்சல் குளத்திற்குச் செல்லும் போதும் வெள்ளி நகைகளைக் கழற்றி வைப்பது நல்லது.
கறுத்துப் போன நகைகளை எலுமிச்சை சாறு, பேக்கிங் சோடா அல்லது டூத்பேஸ்ட் கொண்டு மென்மையாகத் துலக்கினால் மீண்டும் பளபளப்பாக மாறும்.
எனவே, வெள்ளி நகைகள் கறுப்பது ஏதோ மாய மந்திரமோ அல்லது கெட்ட சகுனமோ அல்ல; அது முற்றிலும் ஒரு அறிவியல் பூர்வமான வேதிவினை என்பது நூறு சதவீதம் நிரூபிக்கப்பட்ட உண்மை.
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here