

என் தோழிக்கு ஒரு பழக்கம் உண்டு. தினசரி அதிகாலையில் எழுந்து விடுவார். அன்றாட வேலைகளை சிறப்பாக செய்வார். அதேபோல் தோட்டத்தில் விளையும் காய்கறிகளை விற்பது முதல் அந்த மாதம் எவ்வளவு சம்பாதிக்க முடிகிறது என்று அந்த இலக்கை நோக்கி பயணிப்பார். அதற்கு இவ்வளவு சம்பாதித்து சேமிக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளுவார். அதுபோல் சம்பாதித்து சேமித்து விட்டால் அவளின் நற்செயலை அவளாகவே பாராட்டிக் கொண்டு, அதற்கான பரிசுகளை வாங்கி வைத்துக் கொள்வார். அந்த பரிசுகள் வீட்டிற்கு உபயோகமானதாக இருக்கும். சமயம் வரும்பொழுது பயன்படுத்துவார் அல்லது வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு கொடுத்து மகிழ்வார்.
அதேபோல் புடவைகளை வைப்பதற்கான துணிப்பைகளை தைத்து விற்பார். அந்த மாதத்திற்குள் எவ்வளவு தைக்க வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறாரோ அவ்வளவு வந்துவிட்டால் அதற்காக ஒரு பொருளை வாங்கி வைத்துக் விடுவார்.
இதற்காக அவர் உறுதிமொழி எடுத்துக் கொண்டு திட்டமிட்டு செயல்படுவதில் தான் அவரின் தனித்தன்மையை வெளிப்படுத்த முடிகிறது.
மேலும் நேசித்தே இதுபோன்ற வேலைகளை செய்வதால் மன அழுத்தம் ஏற்படுவதில்லை. இதனால் பயனுள்ள வழியில் நேரத்தை செலவிட முடிகிறது. மேலும் நமக்குத் தேவை இல்லாத சம்பந்தமில்லாத எந்த விஷயத்திலும் தலையிடாமலும், நம் வேலையை தொடர்ந்து செய்ய முடிகிறது. இதனால் வேலை நேரங்களில் அடிக்கடி செல்ஃபோனை எடுத்து பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தாமல், எந்த வேலையை எப்போது முடிக்க வேண்டும்; எதை சற்று நேரம் எடுத்து செய்யலாம் என திட்டமிட்டு செய்ய முடிகிறது.
"அக்கம்பக்கத்தில் ஏதாவது உதவி கேட்டால் என்னால் செய்ய முடியும் என்றால் செய்து தருகிறேன் என்று திட்டவட்டமாக கூறி செய்து கொடுப்பேன். இல்லை என்றாலும் என்னால் முடியாது என்று சொல்லிவிடுவேன். இதனாலும் பிரச்சனை ஏற்படுவதில்லை. மேலும் எதிர்மறையாக பேசுபவர்கள் யாரும் இப்பொழுதெல்லாம் என்னிடம் நெருங்கி வந்து பேசுவதில்லை. இதனால் எனக்கு டென்ஷன் ஏற்படுவதில்லை.
இப்படி நம் வேலையை அழகாக ஆரம்பிக்கத் தொடங்கி விட்டால் மற்றவர்கள் நமக்கு உத்வேகம் கொடுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. நமக்கு நாமே உத்வேகம் கொடுத்துக் கொள்வது மிக முக்கியமாகிறது. இதை வீட்டிலும் புரிந்து கொள்கிறார்கள். இதனால் வீட்டினரும் நமக்கு உற்சாகமூட்டும் வார்த்தைகளை பேசுகிறார்கள். அப்படி பேசும் பொழுது நம் இலக்குகளை அடைய, அதற்கான முயற்சிகளில் ஈடுபட, புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்ள, அதற்கான தரவுகளைத் தேட ஆர்வம் கொள்வதன் மூலம் செய்யும் செயலை சிறப்பாக செய்து முடிக்க முடிகிறது. அதில் ஒரு மனநிறைவு கிடைக்கிறது என்பதால், கணவரிடம் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்டு நச்சரிக்காமல், நானாகவே எனக்கு பரிசு பொருட்களை வாங்கி உற்சாகப்படுத்திக் கொள்கிறேன்," என்று கூறுகிறார்.
யார் வேண்டுமானாலும் குளத்தை கலங்கடிக்க முடியும். கலங்கிய குளத்தை தெளிய வைக்க அந்தக் குளத்தால் மட்டுமே முடியும். நம் மனமும் அப்படித்தான்! என்ன நான் சொல்வது சரிதானே தோழிகளே?