

நம் அனைவரது மனதிலும் போன ஜென்மத்தில் நாம் என்னவாக பிறந்திருப்போம் என்ற கேள்வி நிச்சயம் ஒரு முறையாவது எழுந்திருக்கும். அதை தெரிந்துகொள்ளவும் நிச்சயம் ஆவல் இருக்கும்.
நாடி ஜோதிடத்தில் சுவடிகளில் கர்ம காண்டம் பார்த்து ஒருவரின் முற்பிறப்பின் விவரங்களைச் சொல்லும் வழக்கம் உள்ளது. அதிலெல்லாம் எனக்கு அவ்வளவாக நம்பிக்கை இருந்ததில்லை. ஆனால் என் வாழ்வில் நிகழ்ந்தவைகளை தொடர்புபடுத்திப் பார்க்கும்போது முன் ஜென்மத்தில் பாம்பாகப் பிறந்திருப்பேனோ என்ற சந்தேகம் வலுப்பெறுகிறது.
நான் பிறப்பதற்கு முன் எங்கள் வீட்டிற்குள் ஒரு பாம்பு வந்ததாம். என் தந்தை அந்தப் பாம்பை அடித்து விட்டாராம். அதனால் அம்மா வேண்டிக் கொண்டபடி எனக்கு வைத்த பெயர் நாகரத்தினம். திருமணம் ஆகும் வரை வாழ்க்கை (நாக) பிரச்னைகள் ஏதுமின்றி போய்க் கொண்டுருந்தது.
புகுந்த வீட்டில் என் மாமனார் பெயர் நாகராஜன். எனக்கு குழந்தை பிறக்க தாமதமானதால் ஜோதிடரிடம் கேட்டதில் நாகதோஷம் உள்ளதாகவும் ராமேஸ்வரத்தில் நாக பிரதிஷ்டை செய்து பூஜை செய்ய வேண்டுமெனக் கூறினார். செய்தோம். அதன் பிறகும் என் வாழ்வில் நாகர் தொடரத் தொடங்கினார்.
நாங்கள் வீடு கட்டி குடிவந்த இடத்தின் பெயர் ‘நாகோல்’ . அந்தக் காலத்தில் நாகப்பாம்பு இந்தப் பகுதியில் நிறைய நடமாடுமாம். அதனால் நாகோல் என்ற பெயராம். இப்போதும் இந்த ஏரியாவில் அவ்வப்போது தலை காட்டும். எங்கள் வீட்டிற்குள்ளும் பாம்புகள் நிறைய முறை விஜயம் செய்துள்ளன. அருகில் இருப்பவர்கள் ’அதெப்படி உங்கள் வீட்டிற்கு மட்டும் பாம்புகள் தேடி வருகின்றன’ என்று கேலி செய்வர். புரியாத புதிர்தான்.
ஒருமுறை ஒரு குட்டிப் பாம்பு எங்கள் வீட்டு ஹால் ஓரத்தில் இருப்பதைப் பார்த்த என் கணவர் அதைக் கொல்ல மனமில்லாமல் என்ன செய்வதென்று தெரியாமல் அலமாரியில் வைத்திருந்த கொசு மருந்தை எடுத்து அதன் மேல் ஸ்பிரே செய்துவிட பாம்பு மயங்கி ஹால் ஓரத்திலேயே நின்றிருந்தது. (கொசு மருந்து கொசுவைக் கூட கொல்லாது என்பது தெரிந்ததுதானே) பிறகு பாம்பு பிடிப்பவர் வந்து உயிருடன் பிடித்துக்கொண்டு போனார்.
மதுரையில் ஒரு கோயிலில் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தபோது ‘உஸ் உஸ்’என்ற சத்தம் எனக்கருகில் கேட்டது. நான் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தேன். அங்கு ஒரு அம்மாவிற்கு சாமி வந்து கைகளை தலைக்கு மேலே நாகம் படமெடுப்பது போல வைத்துக் கொண்டு புஸ்ஸென்று சப்தமிட்டபடி சாமியாடிக் கொண்டிருந்தார். ஏன் எனக்கருகில் இருந்தவருக்கு நாக தேவதை வந்து சாமியாட வேண்டும்? புரியவில்லை.
இதோடு விட்டதா? நான் பெருமாள் கோயில்களுக்குச் செல்லும் போதெல்லாம் கருடாழ்வர் சன்னிதிக்கு அருகில் யாரோ தள்ளி விட்டதைப் போல் கீழே விழுந்து விடுவேன். சமீபத்தில் வெங்கடேஸ்வரரை தரிசனம் செய்து விட்டு ஜாக்கிரதையாக விழாமல் வெளியே வந்தேன். அப்போது எங்கள் வீட்டினர் ‘மேலே பார் கருட பகவான் உன்னை கீழே தள்ள வந்திருக்கிறார்’ என்று சொல்ல நான் வானத்தைப் பார்த்தபோது நிஜமாகவே கருடன்கள் வட்டமடித்துக் கொண்டிருந்தன.
இந் நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும்போது நிஜமாகவே எனக்கும் பாம்புக்கும் முன் ஜென்ம தொடர்பு இருந்திருக்குமோ?
பின் குறிப்பு: உண்மையில் நான் பல்லியைப் பார்த்தால் கூட பயந்து ஓடுவேன்.