தமிழ்த் தாத்தா என்று அனைவராலும் அழைக்கப்படும், மகாமகோபாத்யாய டாக்டர் உ.வே. சாமிநாத ஐயரின் கொள்ளுப்பேத்தியாகிய சுகன்யா ராம்கோபால், இந்தியாவிலேயே முதன் முதலாக பெண்கள் கடம் வாசிக்க பிள்ளையார் சுழி போட்ட பெருமையைத் தன்னுள்ளே கொண்டவர்.
உலக மகளிர் தினத்தையொட்டி, இவரளித்த மினி பேட்டி பின்வறுமாறு :-
கடம் பயில தூண்டியது ?
சங்கீதப் பின்னணியுடைய குடும்பம் என்னுடையது. வாய்ப்பாட்டு கற்றேன். சிறு வயது முதலேயே, தாள வாத்தியங்கள் மீது விருப்பம் உண்டு. வயலின், மிருதங்கம் பயின்றேன். சிறு - சிறு கச்சேரிகளுக்கு வாசிக்க ஆரம்பித்தேன்.
ஒரு கச்சேரியில், கடம் வித்வான் விக்கு விநாயக்ராம் சாரின் வாசிப்பை நேரில் கேட்டேன். அச்சமயம் கடத்திற்கும், மிருதங்கத்திற்கும் இடையே நடை பெற்ற உரையாடல் என்னை ஈர்க்க, கடம் பயில ஆசைப்பட்டேன்.
பின்னர் ?
விநாயக்ராம் சாரிடம், கடம் பயில எனக்கு ஆசையாக இருக்கிறது எனக் கூறியவுடன், 'கடம், ஆண்களுக்குரிய வாத்தியம். உன் கைகள் மிருதுவானவை. நீ வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம் போன்றவைகளில் கவனம் செலுத்து' என்றார்.
விநாயக்ராம் சார் அப்படிக் கூறியதை, என் மனது ஏற்கவில்லை. கொடாக்கண்டன்- விடாக்கொண்டன் மாதிரி, சாரின் தகப்பனார் கலைமாமணி திரு டி.ஆர்.ஹரிஹர சர்மா சாரிடம் சென்று வருத்ததத்துடன் முறையிட்டேன்.
அவர் உடனே, "ஆண் வாசிக்கிறானா? பெண் வாசிக்கிறாளா? என்பது கடத்திற்குத் தெரியாது. கற்க விரும்புவர்களுக்கு, கடம் சொல்லிக் கொடுக்கலாம்" என்றார். அச்சமயம், விக்கு விநாயக்ராம் சார், ஒரு வருட கான்டிராக்டில் பெர்க்லி பல்கலைக் கழகம் செல்ல, ஹரிஹர சர்மா சார் எனக்கு கடம் கற்றுக்கொடுத்தார். விரல்களின் டெக்னிக், மற்றும் திமிகிட, தரிகிட போன்ற வேகமான வார்த்தைகளை பயில்வித்தார். விநாயக்ராம் சார் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தபின், என் விடா முயற்சியையும், வாசிப்பையும் பாராட்டினார். அவரும் என்னை அருமையாக வழி நடத்தினார். என ரோல்மாடல் சார்தான்.
பல்வேறு கடங்களில் பலவகை நாத ஒலிகளை எழுப்ப முடியும் என்பதை அறிந்தேன். கடம் வாசிப்பதில் வித்தகி ஆனேன். அநேக பரிசுகளும், பாராட்டுக்களும் கிடைத்தன.
உங்களிடம் எத்தனை கடங்கள் இருக்கின்றன?
சுமார் நூறுக்கும் மேற்பட்ட கடங்கள் இருக்கின்றன. மூன்று தலைமுறைகளாக கடம் தயாரிக்கும் குடும்பம் மானா மதுரையிலுள்ளது. அவர்களிடமிருந்துதான் கடம் வாங்குவது வழக்கம். கடந்த 50 ஆண்டுகளாக வாசித்து வருகிறேன்.
நினைவில் நிற்கும் நிகழ்வுகள் ஏதாவது?
அமெரிக்காவில் கச்சேரி நடக்கையில், பார்வையாளர்களிலிருந்து வயதானவர் ஒருவர் மேடையேறி வந்து, பாராட்டினார். மேலும், "தமிழ்த் தாத்தா, அன்று பாட்டு கற்க விரும்பியது நடக்கவில்லை. கொள்ளுப்பேத்தியாகிய நீ, அதைப் பூர்த்தி செய்துவிட்டாய். அவரின் ஆசிகள் பரிபூரணமாக உனக்கு இருக்கிறதென" வாழ்த்திச் சென்றார்.
'ஸ்த்ரீ தால் தரங்' என்கிற எங்கள் அமைப்பில் மிருதங்கம், வயலின், புல்லாங்குழல், வாய்ப்பாட்டு, மோர்சிங், கடம் என வாசிக்கும் அனைவருமே பெண்கள்தான்.
முதன் முதலாக 'ஸ்த்ரீதால் தரங்' ராக மாலிகா அமைப்பின் மூலம் அபுதாபியில் நிகழ்வினை நடத்துகையில், வருகை தந்திருத்த பிரபல ஷேக் பிரமுகர்கள், இந்திய தூதுவர் போன்றோர் மேடையேறி வந்து பாராட்டினார்கள்.
வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
விக்கு விநாயக்ராம் சார் பெயரில் கடம் பள்ளியொன்றை ஆரம்பித்து, விக்கு சார் பாணியில் மாணவர்களுக்கு கடம் கற்றுக்கொடுத்து வருகிறேன்.
பாரதி கண்ட புதுமைப் பெண்கள், புயலென செயல்பட்டு அனைத்து துறைகளிலும் கஷ்டப்பட்டு சாதித்து வருவது பெருமைக்குரிய விஷயமாகும்.
இறையருள், குருவருள், ரசிகர்களின் பாராட்டுகள், குடும்பத்தினரின் ஆதரவு போன்றவைகளே எனது முன்னேற்றத்திற்கு காரணம்.
மகளிர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து பேட்டியை நிறைவு செய்தார் சுகன்யா ராம்கோபால்