

நேரமாகியும் எழுந்திருக்கவில்லை; நேற்று நடந்த அந்த நிகழ்வு மனதை ஆழமாக பாதித்திருந்தது. இருந்தும் அப்படியொரு ஆழ்ந்த தூக்கத்தில் இலயித்திருந்தான் வெற்றிவேல். படுத்ததே விடியற்காலை 3:00 மணி போல் தான்.
“வெற்றி எந்திரிக்கலையா மணிய பாரு ஒன்பதே கால் ஆச்சு!” அடுப்படியில் சமையல் வேலைகளை பார்த்தபடி எழுப்பினாள் அம்மாவான ஜெயந்தி.
கண்ணை லேசாக திறந்தான், 'கடவுளே எல்லா மக்களும் நல்லா இருக்கணும்.. நானும் நல்லா இருக்கணும்..!' என்று மனதில் நினைத்தபடி படுக்கையை விட்டு எழுந்தான். உடம்போ அடித்துப் போட்டது போல் மந்தமாக இருந்தது.
அப்பா சொல்வதையும், செய்வதையும் பார்த்து பார்த்து வெற்றிக்கு சிறுவயதில் இருந்தே காலையில் எழும்போது, கடவுளே எல்லாரும் நல்லா இருக்கணும் என்று வேண்டிக் கொள்ளும் பழக்கம் ஒட்டிக்கொண்டது.
கொல்லைப்புற வாசலில் அமைதியாக வந்து உட்கார்ந்தான். கண்கள் தக்காளிப் பழம் போல் சிவந்திருந்தது.
குளியல் அறைக்குள் சென்று தழும்ப.. தழும்ப.. தண்ணீர் இருந்த அண்டாவிற்குள் முகத்தை முக்கி கண்களை விழித்தான். அந்த குளிர்ந்த நீர் கண்களை மட்டும் தான் குளிர்ச்சியாக்கின; ஆனால் மனதின் வெப்பத்தை தணிக்கவில்லை.