

கோமதி புரண்டு படுத்தாள். மணி நாலரை இருக்குமா? தனது கைபேசியைத் தடவி எடுத்து ஒளியூட்டினாள். ஐந்தை நெருங்கிக்கொண்டிருந்தது. இன்னொரு முக்கா மணி நேரம் தலையைச் சாய்ப்போம் என நினைத்தபடி, இன்னொரு புறமாகத் திரும்பிப்படுத்தாள்.
காலை நாலரைக்கு எழுந்திருப்பது கோமதியின் வெகுநாள் பழக்கம். அலாரம் வைக்காவிட்டாலும் முழிப்பு வந்துவிடும். பயலாஜிகல் க்ளாக் என்பார்களே, அதைப்போல!
எழுந்து, பல் தேய்த்து, காபி குடித்து, பத்து நிமிடத்தில், வாசல் தெளிக்க வந்துவிடுவாள். முன் போர்டிகோவையும் நன்றாகப் பெருக்கி, தெருவாசலைப் பெருக்கி விடுவாள். முன்பக்கம் ஓரிரு பூச்செடிகள் உண்டு. சப்போட்டா, கொய்யா மரங்களும். இலைகள் இருக்கும். சந்தோஷமாக இலை சத்தைகளைப் பெருக்கி, வீட்டுவாசலின் இருபுறமும் உள்ள பேப்பர் மற்றும் குப்பைகளையும் நன்றாகத் தள்ளிவிட்ட பின், செதும்ப சாணி தெளித்துவிட்டு, பெருக்கி வைத்த குப்பைகளை வாரி தெருவோரம் போட்டு வருவாள்.