

“பாறையில் செய்தது என் மனம் என்று தோழிக்குச் சொல்லியிருந்தேன்.
பாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியாய் நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய்…”
இதோடு பத்தாவது முறையாக இந்த வரிகளை முணுமுணுக்கிறாள் பவித்ரா. ஒவ்வொரு முறை பாடலை மெல்லிய குரலில் பாடும்போதும், ஜீவன் மனதுக்குள் எட்டிப் பார்த்தான். உடனே கண்ணாடி முன் நின்று தன்னை ரசிப்பாள். அவள் அருகில் தோளோடு தோள் உரசியவாறு ஜீவன் நிற்பதுபோல் ஒரு உணர்வு தோன்றி அவளைச் சிலிர்க்கவைக்கும். இப்போதும் அதே சிலிர்ப்பு.
வெட்கம் பூசிக்கொண்ட அவள் முகத்தில் அழகு கூடி, கன்னங்கள் மின்னின. காதலில் கரையும்போது தோன்றும் பரவசம், உடலில் மாற்றங்களை உண்டுபண்ணும் என்பதை இப்போது நன்றாகவே உணர்கிறாள். நெற்றியில் விளையாடிய கூந்தலை ஒற்றை விரலால் லாவகமாக நகர்த்தி, சரிசெய்து கண்ணாடியில் தெரியும் தன் பிம்பத்துடன் பேசினாள்.
“ஹேய் பவி, நீ நெஜமாவே அழகாயிட்டே. ஜீவன் தந்த இந்த வெட்கம் உன் முகத்துக்கு தனி அழகைக் கொண்டுவந்திருக்கு. கண்ணுல தெரியற காதல் ஆயிரம் கதைகளைப் பேசுது.