

அம்புலு மாமிக்கு மரங்கள் என்றால் உயிர். சாதாரணமாக செடிகளுக்கு தான் தண்ணீர் ஊற்றுவார்கள். அம்புலு மாமியோ மரங்களுக்கும் தண்ணீர் விட்டு மகிழ்ச்சி அடைவார். அரச மரமும் ஆலமரமும் அவருக்கு மிகவும் பிடித்த மரங்கள். சென்னை மதராஸாக இருந்த போது அங்கொன்றும் இங்கொன்றுமாவது ஆலமரங்களை பார்க்க முடிந்தது. இப்போது அடையாறு ஆல மரத்தை தவிர வேறு ஆலமரத்தை பார்க்க முடியாமல் போய்விட்டது. அம்புலு மாமி மாதத்திற்கு ஒரு முறையாவது அடையாறு சென்று அம்மரத்தை பார்த்து வருவார். அவர் இருந்த தெருவில் அவரை செல்லமாக 'ஆலமர அம்புலு' என்று அழைத்தனர்.
இப்படி இருக்கையில் அவர் காதுக்கு ஒரு காய்க்காத மரத்தை பற்றி செய்தி எட்டியது. அது தெரு கோடியில் இருந்த ஒரு வீட்டின் புழக்கடையில் நின்று கொண்டிருந்த ஒரு காய்க்காத விளாமரம். கர்ப்பம் தரிக்காத பெண்களை ஏசுவதை போல இந்த மரத்தை 'மலடி மரம்' என்றும், 'விளங்காத விளாமரம்' என்றும் அவ்வீட்டாரும் அக்கம் பக்கத்தினரும் பேசிக் கொண்டதை அறிந்த அம்புலு மாமி மிகவும் வருந்தினாள்.
ஒரு நாள் வேலைக்காரி மூலம் அந்த விளா மரத்தை வெட்ட முடிவு செய்யப்பட்டதை கேள்வி பட்டு அந்த வீட்டிற்கு சென்று விளாமரத்தை வெட்ட வேண்டாம் என்று கெஞ்சி கேட்டு கொண்டார். "எனக்கு 48 நாள் அவகாசம் கொடுங்கள். நான் உங்கள் மரத்தை காய்க்க வைக்கிறேன்," என்றார். அந்த வீட்டுக்காரருக்கு அம்புலு மாமியின் விண்ணப்பம் வித்தியாசமாக இருந்த போதிலும் விளா மரத்தை வெட்டும் முடிவைத் தள்ளி போட ஒத்துக்கொண்டார்.
அம்புலு மாமி வந்து போன ஒரு மாதத்துக்கு எல்லாம் விளா மரத்திடம் மாற்றம் ஏற்பட்டது. அடுத்த இரண்டு வாரத்தில் மரத்தில் பூக்கள் தோன்றின. வண்டுகளும் தேனீக்களும் மரத்தினை மொய்க்க தொடங்கின. பின்பு என்ன? ஹாக்கி பந்துகள் போன்ற காய்கள். அம்புலு மாமிக்கு குட் நியூஸ் தெரிவிக்கபட்டது. அவர் அளவில்லா சந்தோஷம் அடைந்தார். வெகு காலமாக குழந்தை இன்றி இருந்த தன் மகளுக்கு குழந்தை உண்டானதை போன்ற மகிழ்ச்சி மாமிக்கு.
"என்ன மாயம் செய்தீர்கள் மரத்தை காய்க்க வைக்க? சொல்ல முடியுமா மாமி" கேட்டார் அந்த கோடி வீட்டு காரர்.
அம்புலு மாமி சொன்னார் "மாயமும் இல்லை மந்திரமும் இல்லை. விளா மரம் காய்க்க ஒரு மண்டலம் பெருமாள் கோயில் அரச மரத்தை சுற்றினேன். ஒரு மரத்திற்கு இன்னொரு மரம் மனம் இறங்கியது. அவ்வளவு தான்."
விளா மர வீட்டுக்காரர் மாமியின் பாதம் தொட்டு வணங்கி வாய் பேசாமல் அந்த இடத்தை விட்டு அகன்றார். இந்த கலி காலத்தில் மனித நேயம் அரிது. அதனினும் அரிது மிருக நேயம். மிருக நேயத்தினனும் அரிது மர நேயம்.