

அலுவலகத்திலிருந்து களைத்து வந்த தீப்தி சற்று ஓய்வு எடுக்க எண்ணி காபி டம்ளருடன் ஹாலுக்கு வந்தாள். அப்போது வாசலில் யாரோ வந்து நிற்பதைப் பார்த்தாள். முறுக்கு மீசையும் கையில் கதையும் வைத்துக் கொண்டு ஆஜானுபாகுவாக எருமை மேல் அமர்ந்து கொண்டிருந்த அவரைப் பார்த்ததும், 'இவர் எதற்கு இப்பொழுது இங்கே வருகிறார்' என்றெண்ணி நடுங்கிப் போனாள். 'யாருக்கு விதி முடிந்து விட்டது என்று தெரியவில்லையே?' என்று நெஞ்சம் பதைபதைக்க நின்று கொண்டிருந்தாள்.
வந்தவரோ "உன்னை என்னுடன் அழைத்துச் செல்வதற்கு தான் வந்திருக்கிறேன்" என்றார்.
"என்னையா?" தீப்தி திகைத்துப் போனாள். அந்த வீட்டில் இருப்பவர்களிலேயே அவள் தான் இளையவள். வயதான மாமியார், மாமனார் மற்றும் அவளை விட நான்கு வயது பெரியவனான அவள் கணவன் பரத் ஆக நால்வர் இருக்கும் குடும்பம் அது.
சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, "ஐயா! நான் இரவு உணவு எல்லோருக்கும் தயார் செய்ய வேண்டும். எனக்கு அரைமணி நேரம் அவகாசம் கொடுங்கள்!" என்றாள்.