

மீனா பள்ளி முடிந்து வீட்டை அடைந்தாள்.
கதவு சாத்தியிருந்தது.
தள்ளினாள். திறந்துக் கொண்டது.
வீட்டின் ஈசான மூளையில் கயிற்றுக் கட்டிலில் அவள் பாட்டி செல்லாத்தாள் கண் மூடி படுத்திருந்தாள்.
புத்தகப் பையை வைத்து விட்டு, பாட்டியின் அருகில் சென்று பாட்டியை எழுப்பினாள் மீனா.
பாட்டிக்கு காது சுத்தமாகக் கேட்காது. வயது எண்பது.
செல்லாத்தாள் கண் விழித்து மீனாவைப் பார்த்தாள். ஏதும் பேசாமல் கண் மூடிக் கொண்டாள்.
எரிச்சலடைந்த மீனா, "பாட்டி... பாட்டி..." என உலுக்கினாள்.
கண்விழித்த செல்லாத்தாள் 'என்ன?' என்று செய்கையால் கேட்டாள்.
பதிலுக்கு 'அம்மா எங்கே?' செய்கையால் கேட்டாள் மீனா.
'தெரியவில்லை' எனக் கை ஆட்டினாள் செல்லாத்தாள்.
மீனா தன்னுடைய முன் பக்கம் இருந்த இரட்டை ஜடையை பின்னுக்கு தள்ளி விட்டுக் கொண்டே வாசல் வந்தாள்.
பக்கத்து வீட்டில் நுழைந்தாள்.
வசந்தி பூ கட்டிக் கொண்டு இருந்தாள்.
"அக்கா... எங்கம்மா எங்க போயிருக்காங்க? உங்களுக்கு தெரியுமா?"
"உன்கிட்ட சொல்ல சொல்லிவிட்டு தான் உங்கம்மா போயிருக்காங்க!"
"எங்க?"
"'பக்கத்து ஊர்ல கரகம் ஆட போறேன். மீனாவை சோறு மட்டும் வடிச்சுக்க சொல்லு... கருவாட்டுக் குழம்பு செய்து வைச்சிட்டேன்னு' சொல்லிட்டு போனாங்க."
"சரிக்கா... நான் யூனிஃபார்ம் மாத்திட்டு, படிக்கறேன்க்கா. நாளைக்கு டெஸ்ட் இருக்கு."
"மீனா.. நல்லா படிமா. உங்கம்மா உனக்காகத்தான் ஓடி, ஓடி சம்பாதிக்குது."
"சரிக்கா. நல்லா படிச்சு அம்மாவை காப்பாத்தறேன்." உறுதி அளித்துவிட்டு வீட்டிற்கு வந்து விட்டாள் மீனா.
மீனாவின் அழகைப் பார்த்து ஒரு கணம் பொறாமைப் பட்டாள் வசந்தி.