

“ராதிகா... ராது, இங்கே கொஞ்சம் வரியா?”
சமையலறையில் இருந்து அம்மாவின் அழைப்பைக் கேட்டதும் எழுதிக்கொண்டிருந்த கல்லூரி அசைன்மெண்டை ஓரமாக வைத்துவிட்டு எழுந்து வந்தேன்.
“என்னம்மா, எதுக்குக் கூப்பிட்டே? டிஃபன் சாப்பிடறதுக்கா?”
“நீ சாப்பிடறது இருக்கட்டும். முதல்ல உங்க அப்பாவை வந்து சாப்பிடச் சொல்லு. இட்லி சூடா இருக்கு. சட்னியும் ரெடி.”
“அம்மா, இது உனக்கே கொஞ்சம் ஓவராத் தெரியலையா? அப்பா உன் கண் முன்னாடி ஹால்ல உட்கார்ந்து டிவி பார்த்துட்டிருக்காரு. நீ கிச்சன்ல இருந்து கூப்பிட்டாலே அப்பாவுக்குக் கேட்கும். அதை விட்டுட்டு ரூம்ல படிச்சுட்டிருக்கற என்னை இவ்வளவு கத்திக் கூப்பிடறே. இது நியாயமா?”
“ஆமா, பெரிய நியாயம் அநியாயத்தைக் கண்டுட்டே நீ. உங்க அப்பாவை சீக்கிரம் வரச் சொல்லு.”
“ஓ, ரெண்டு பேருக்குள்ள டிஷ்யூம் டிஷ்யூமா? அப்போ ஒரு ரெண்டு நாள் எனக்குக் கொண்டாட்டம்தான்.”
“என்ன டி, என்ன சொன்னே?”
“இல்லமா, ரெண்டு நாள் எனக்குத் திண்டாட்டம்னு சொன்னேன்.”