

ஜன்னலோரப் படுக்கையில் சாய்வாக படுத்திருந்த சுந்தரம் மனைவி ஜானகியை வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். அவளை மனைவி என்று நினைக்கும் உரிமை தனக்கு இருக்கிறதா என நினைத்தவர், 'என்ன மாதிரி மனுஷி இவள்? இவளிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் எவ்வளவோ இருக்கிறது. ஆனால் கற்றுக்கொள்ள காலம் தான் இல்லை. ஓடிக்கொண்டிருந்த போது புரியாத பல விஷயங்கள் இப்படி ஓய்ந்து கிடக்கையில் தான் புரிகிறது. இந்தப் புரிதலால் யாருக்கு என்ன லாபம்?' என நினைத்தவர் 'ஹூம்' என்ற நீண்ட பெருமூச்சு விட்டார்.
கண்கள் லேசாகக் கசிந்தன. சுய பச்சாதாபத்தாலா அல்லது சுடுகின்ற உண்மையை மனம் எண்ணிப் பார்த்ததாலா?... தெரியவில்லை.
கண்களை மூடிக்கொண்டு தூங்க முயற்சி செய்தார். தூக்கம் எங்கே நினைத்தபடி வருகிறது? ஆனால் அதையும் குறை சொல்ல முடியாது. படுத்தே கிடப்பதனால் எப்போது தூங்குகிறோம் எப்போது விழித்திருக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் உறக்கமும் விழிப்புமாகவே நேரம் கரைகிறது. அப்புறம் எப்படி நாம் நினைக்கும் நேரத்தில் தூக்கம் வரும்.