

கோவை நகரின் சுகமான வானிலையை அனுபவிக்க முடியாமல் கவிதா பயணியர் கூட்டத்தால் பிதுங்கி வழியும் பஸ்லிருந்து இறங்கினாள். கலங்கிய கண்களுடன் ஆபீசுக்குள் நுழைந்தவளிடம் "என்ன ஆச்சு கவிதா ஏன் ஒரு மாதிரி இருக்க" என்றவள் வானதி, ஆபீஸில் கவிதாவின் பக்கத்து ஸீட்காரி.
"பஸ்ல ரொம்ப கூட்டம் அக்கா, ஒரு பொறுக்கி என் மேல இடிச்சுட்டு உரசிட்டே வந்தான். எனக்கு ஒரு மாதிரியா இருக்கு" என்ற கவிதாவின் கண்கள் மீண்டும் கலங்கியது.
"ஆமா கவிதா எருமை மாதிரி இடிச்சிட்டே வருவானுங்க இப்போ இது ரொம்ப அதிகமாயிடுச்சு. என்ன செய்யறது இதையெல்லாம் பொம்பளைங்க சகிச்சுக்க வேண்டி இருக்கிறது" என்றாள் வானதி ஆற்றாமையுடன்.
கவிதா அந்த பிரபல மோட்டார் கம்பெனியின் அக்கவுண்ட் செக்ஷ்னில் வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் தான் ஆகிறது. கவிதா வேலையில் சேர்ந்த முதல் நாளே வானதி அவளிடம் தோழமையுடன் பழகினாள்.
அவ்வப்போது வானதி அவளிடம் கவிதா நம்ம ஆபீஸ் ஹெட் கிளார்க் கொஞ்சம் முசுடு. ஆனால் நல்லவர். பியூன் முத்து நல்ல சுறுசுறுப்பானவர். மேனேஜரோட பி.ஏ நித்யா அதிகம் பேச மாட்டாங்க என ஒவ்வொருவரை பற்றியும் கூறினாள். அதனால் கவிதாவுக்கு ஆபீஸின் சூழல் இயல்பாக இருந்தது.
அன்று லஞ்ச் டைமில் எப்போதும் தன் கேபினுக்குள் லஞ்சை முடித்துக் கொள்ளும் நித்யா டைனிங் ஹாலுக்கு வந்தவள் இவர்களின் அருகில் வந்து அமர்ந்தாள். "நம்ம புது ஃப்ரண்ட் எப்படி இருக்காங்க" என்று வினவினாள் வானதியைப் பார்த்து.