

காலை மணி 10.
வரவேற்பு அறையில் செமக்கூட்டம். பலர் ஜோடிகளாக வந்து இருந்தார்கள். சில ஆண்கள் மற்றும் பெண்கள் வந்து இருந்தனர்.
வரவேற்பு அறையில் ஒரு சரஸ்வதி சிலை..!
பணிப்பெண் வந்து “நாகராஜ்... நாகராஜ்...” என்று குரல் கொடுக்க, நாகராஜ் உள்ளே சென்றார். சரியாக இருபது நிமிடங்கள் முடிந்தன.
நாகராஜ் சந்தோஷமாக வெளியேறிவிட்டார்.
அடுத்து பணிப்பெண் “ரஞ்சனி ஸ்ரீதர்...” என்று குரல் கொடுத்தார்.
ரஞ்சனி உள்ளே போனார்.
“குட் மார்னிங் மேடம்…!”
“குட் மார்னிங்… சிட் டவுன்…!”
ரஞ்சனி உட்கார்ந்து விட்டார். மனதில் பதட்டம். மன அழுத்தம்.
“மேடம் உங்கள் பேர்…?”
“ரஞ்சனி ஸ்ரீதர்…!”
“கணவன் எங்கே வேலைப் பார்க்கிறார்…?”
“மேடம் ஒரு வங்கியில்…!”
“சரி... உங்கள் பெண் பெயர் என்ன…?”
“கங்கா…!”
“குட்.”
“அவள் டாய்லெட் போனால் உதவி வேண்டுமா…?”
“இல்லை மேடம்… அவளே செய்துவிடுவாள்…!”
“உங்களுக்குப் பஸ் வேண்டுமா..? ”
“ஆமாம் மேடம்…!”
“நேரம் தவறாமை வேண்டும். 8.30க்கு பஸ் வரும். அது காக்க வைக்கமுடியாது. உங்கள் பெண் 8.20க்கே ஸ்டாப் வந்துவிட வேண்டும்…!”
“ஓகே மேடம்…!”
“மதியம் ஒரு மணி நேரம் லஞ்ச் இடைவேளை. நீங்கள் அப்போது வரலாம். இல்லை அவளே சாப்பிட்டு விடுவாள் என்றால் சரி…!”
“ஓகே மேடம்..! ”
“பிற்பகல் 3.30க்கு பஸ் புறப்பட்டுச் செல்லும். தவறாமல் அவளே பஸ்சில் ஏறிக்கொள்ள வேண்டும். காலையில் நீங்கள் ஏற்றிய இடத்தில் பஸ் நிற்கும். நீங்கள் வந்து கூப்பிட்டுக்கொண்டு செல்லலாம்…!”
“ஃபிஸ் எவ்வளவு மேடம்…?”
“வருடத்திற்கு ரூபாய் 50,000. பஸ் பாதுகாப்பு கட்டணமாக மாதம் ரூபாய் 3,000 நீங்கள் ரூபாய் தர வேண்டும். பாதுகாப்பு கட்டணத்தை டி.சி வாங்கும்போது திருப்பி கொடுத்து விடுவோம்.”
“புக், நோட்டு, பென்சில், பேனா என்று எல்லாம் கொடுத்துவிடுவோம். இதற்காக வருடா வருடம் ரூ. 18,000 நீங்கள் கொடுக்க வேண்டும்…!”
ரஞ்சனி ஸ்ரீதர் வயிற்றைப் புளி கரைத்ததைப் போன்று இருந்தது.
“மேடம்… நீங்கள் பணம் முழுவதையும் இரண்டு தவணைகளில் கொடுக்கலாம். அதாவது இப்போது முதல் தவணை. நான்கு மாதத்தில் முழு பணத்தையும் கொடுத்து விட வேண்டும்…!”
ரஞ்சனி மெளனமாக இருந்தார்.
“இப்போது எவ்வளவு கட்ட வேண்டும் மேடம்…?”
“30,000 மட்டுமே…!”
“உங்கள் பெண் தேர்வு செய்யப்பட்டார்… வாழ்த்துக்கள்..! ”
“ஜி பே பண்ணலாமா…?”
“நிச்சயமாக”.. அதோ அந்த சரஸ்வதி சிலை முன் பார்கோட் உள்ளது.
ரஞ்சனி ஸ்ரீதர் எழுந்து போய் பார்கோடை ஸ்கேன் செய்து ரூ.30,000 செலுத்தினார்.
“மேடம் பணம் வந்துவிட்டது..!”
“என்ன மேடம்…?”
“ஒரு மாதத்திற்கு 3 நாட்கள் விடுமுறை எடுக்க அனுமதி உண்டு. அதற்கு மேல் விடுமுறை எடுத்தால் ஒரு நாளுக்கு ரூ.500 கொடுக்க வேண்டும்…!”
ரஞ்சனி ஸ்ரீதருக்கு மயக்கம் வராத குறைதான்.
“நீங்கள் போகலாம். அடுத்த மாதம் 9ம் தேதி திறக்கப்படும். பஸ் நேரத்திற்கு வந்து விடுங்கள்.”
ரஞ்சனி கவலைப்பட்டார். தான் காசில்லாமல் படித்தது எல்லாம் ஞாபகம் வந்தது. +2 வரை செலவே இல்லை. டிகிரிக்கு மட்டுமே சிறிது பணம்.
உலகம் எப்படி மாறி விட்டது என்று யோசித்துக்கொண்டே வருகையில், அடுக்கு மாடி பள்ளி கட்டடத்தில் ஒரு சரஸ்வதி படம் இருந்தது. மாறாதது அன்றும் இன்றும் என்றுமே சரஸ்வதி படம் மட்டுமே.
கீழே முதல் மற்றும் இரண்டு மாடிக்கு முன்னே பெரிய பெயர்ப் பலகை இருந்தது. அதில் எழுதி இருந்தது : வீணா பப்ளிக் பள்ளி.
பள்ளிக் கல்வி கட்டணத்தை நினைத்தால் நமக்கு பணம் 'வீணா' போகிறதுபோல் தோன்றுகிறது. ஆனால் காலத்தின் கட்டாயம்... கல்வியின் தரத்திற்காக (Best Education, Best School) விண்ணைத் தொடும் கல்விக் கட்டணத்தை சமாளித்து தான் ஆகணும் என்று எண்ணியவாறே வீணா பப்ளிக் பள்ளியின் வெளிவாசலைக் கடந்தாள்.