சிறுகதை: விடை கிடைத்தது!
முகுந்தன், அன்று ஆபிஸிலிருந்து வெகு சீக்கிரம் கிளம்பி, பஸ்ஸில் பயணம் மேற்கொண்டான்.
பஸ்ஸில் அவ்வளவு கூட்டம் இல்லை. இருந்தாலும், உட்கார இடம் கிடைக்காததால் நின்று கொண்டு பயணம் செய்தான். வெளியே பார்த்துக் கொண்டிருந்தவன் ஏதோ யோசித்தவாறு திரும்பினான்.
அவன் கண்கள் ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கண்டன.
முகம் களையாக இருந்தது. ஏற்கனவே அந்த முகத்தை பார்த்தது போன்ற நினைவு வந்தது முகுந்தனுக்கு. எங்கு என்று சட்டென்று பிடி படவில்லை.
ஒரு வேளை அவன் கணக்கு வைத்து இருக்கும் வங்கி கிளையா, மருந்து கடையில் வேலை செய்பவளா அல்லது மாலில் சந்தித்து இருக்கிறானா என்று சிந்திக்க தொடங்கினான்.
பேருந்து ஓடிக் கொண்டிருந்தது. நடு நடுவில் ஸ்டாப்புக்கள் வந்து சென்றன.
நடுவில் திரும்பிப் பார்த்தப் பொழுது அந்த பெண் இவனைப் பார்த்து புன்னகைப்பது போல் தோன்றியது. ஆகாயத்தில் மிதந்தான்.
அவன் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்துக் கொண்டிருந்தது. இறங்க தயார் ஆனான்.
அவள் இருந்த சீட் பக்கம் பார்த்தான். அந்த மங்கையும் எழுந்துக்கொண்டாள். அடுத்து வரும் ஸ்டாப்பில் இறங்க, ஜில்லென்று இருந்தது.
முகுந்தன் மகிழ்ச்சி அடைந்தான்.
ஸ்டாப் வந்ததும் நால்வர் அந்த பஸ்ஸில் இருந்து இறங்கினர். அந்த நால்வரில் முகுந்தனும், அந்த பெண்ணும் அடங்கும்.
அந்த பெண்ணிடம் பேச வேண்டும் என்று வாய் திறக்கும் முன்பு அந்த மங்கையே வினவினாள், "நீங்கள் முகுந்தன் தானே..?" முகுந்தனுக்கு தூக்கி வாரிப் போட்டது; வியர்த்தது.
தொடர்ந்து அந்த பெண் கூறினாள், "உங்களுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது தெரியும். அண்ணி எப்படி இருக்கிறார்கள்?".
முகுந்தன் ஆடிப் போய்விட்டான். முகுந்தன், "நீங்கள்..!" என்று ஆரம்பிக்க, "நான் தான் புனிதா. 12 வருடங்களுக்கு முன்பு, தஞ்சையில் ராஜப்பா நகரில் உங்கள் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் குடியிருந்தோம்...!"
"எனக்கு திருமணம் ஆகி விட்டது. கட்டாயம் அண்ணியுடன் எங்கள் இல்லத்திற்கு வாருங்கள்" என்று சிறிய காகிதத்தில் அவள் கணவர் பெயர், விலாசம் மற்றும் செல் நம்பர் எழுதி கொடுத்தாள்.
மறக்காமல் அவன் விலாசம், செல் நம்பர் விவரங்களை பெற்றுக் கொண்டாள்.
முகுந்தகனுக்கு அப்பொழுது தான் நினைவுவிற்கு வந்தது அவர்கள் தஞ்சாரவூரில் இருந்த நாட்கள் பற்றி.
'பரவாயில்லையே நம்மள சரியா கண்டு பிடித்து விட்டாளே' என்று லயித்துயிருக்கும் பொழுது, புனிதாவின் குரல் முகுந்தனை இந்த உலகிற்கு அழைத்து வந்தது.
விடை பெறும் முன்பு, "அண்ணி பெயர் என்ன?" என்று கேட்க , முகுந்தனிடமிருந்து பதில் வந்தது,
"நர்மதா."
"வெரி குட் நேம்" என்று கூறி சென்றாள் புனிதா.
அவள் போன திக்கைப் பார்த்துக் கொண்டு நல்ல வேளை, விடை கிடைத்ததே என்று நினைத்துக் கொண்டான் முகுந்தன்.
இப்படியும் சில பேருந்து பயணங்கள் அமைவதுண்டு.
உங்களுக்கும் அமைந்திருக்குமே?!

