
இந்திய வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற பெண் ஆட்சியாளர்களில் ஒருவர் அஹில்யா பாய். அவரது சிறப்புகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
பிறப்பும், திருமணமும்;
1725, மே 31ல், மகாராஷ்டிராவில் உள்ள சாண்டி கிராமத்தின் தலைவரான மான்கோஜி ஷிண்டேவின் மகளாகப் பிறந்தார் அஹில்யா பாய். தந்தை, அந்தக் காலத்திலேயே தனது மகளுக்கு எழுதப் படிக்க கற்றுக் கொடுத்தார். மராட்டிய பேஷ்வாவின் படைத்தளபதியும், மால்வாவின் ஆட்சியாளருமான மல்ஹார் ராவ் ஹோல்கர், தனது மகன் கண்டோஜிக்கு அஹில்யாவைத் திருமணம் செய்து வைத்தார். அப்போது அவரின் வயது எட்டு.
மால்வாவின் ராணி;
தனது 29 ஆவது வயதில் கணவர் கண்டோஜியை ஒரு போரில் இழந்த அஹில்யாவிற்கு, அவரது மாமனார் நிர்வாகத்திறன், ராணுவ விவகாரங்கள் மற்றும் போர் பயிற்சிகள் என அனைத்திலும் கடுமையான பயிற்சிகள் அளித்தார். அவரது காலத்திற்குப் பிறகு அரியணை ஏறிய அஹிலியாவின் மகனும் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட, மால்வாவின் ராணியானார் அஹிலியா. தனிப்பட்ட துயரங்கள் இருந்தபோதிலும் அவர் மால்வாவை திறமையாக ஆட்சி செய்தார்.
நீதி தேவதை;
சாதி அல்லது அந்தஸ்தை பொருட்படுத்தாமல் அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்தார். குறைகளை நேரடியாக நிவர்த்தி செய்ய தினசரி பொது விசாரணை நடத்தினார். தவறு செய்த தனது சொந்த மகனுக்கே மரண தண்டனை விதித்தார்.
நிர்வாகத் திறமை;
அஹில்யா பாய், தனது நிர்வாக திறமையால் ராஜ்ஜியத்தை திறம்பட நிர்வகித்ததுடன், வர்த்தகத்தை மேம்படுத்தினார். அவர் அரசியல், பொருளாதாரம், இலக்கியம் வேதங்கள், தத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் ஆழமான அறிவை பெற்றிருந்தார். வறண்ட காலங்களில் நீர்ப்பாசன வசதிகள் மற்றும் நீர் விநியோகத்திற்கு ஏற்றவாறு அவசியமான சாலைகள், கோட்டைகள் மற்றும் படிக்கிணறுகள் நீர்த்தேக்கங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்தினார். சாலைகள் பாலங்களைக் கட்டி வர்த்தகம் மற்றும் பொதுப் போக்குவரத்தை எளிதாக்கினார்.
நிதி மேலாண்மை;
தனது ஆட்சியில் குறிப்பிடத்தக்க நிதி மேலாண்மையை கடைப்பிடித்தார். தனது குடும்பத்தினர் பொது நிதியை தனிப்பட்ட செலவுகளுக்கு பயன்படுத்துவதை நிறுத்தினார். அவரது ஆட்சியில் வருவாயில் 150 சதவீதம் அதிகரித்தது. நல்ல நிதிக் கொள்கையை பின்பற்றியதால் இது சாத்தியமாயிற்று.
பக்தியும், மத நல்லிணக்கமும்;
அஹில்யா பாய் இமயமலை முதல் தென்னிந்தியா வரை நூற்றுக்கணக்கான இந்துக் கோயில்கள், தர்மசாலைகள், குளங்களைக் கட்டினார். 1880ல் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலைப் புனரமைத்தது அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்பாகும். ஒரு பக்தியுள்ள இந்துவாக இருந்த போதிலும் அவர் சமண மற்றும் முஸ்லிம் மதத்தலங்களுக்கும் ஆதரவளித்து மதநல்லிணக்கத்தை கடைப்பிடித்தார்.
வீரப் பெண்மணி;
படைகளைப் போருக்கு தலைமை தாங்கி அழைத்துச் செல்லும்போது வில் மற்றும் அம்புகளுடன் யானை மீது சவாரி செய்தார். 18ம் நூற்றாண்டில் இது அதிசயமாக பார்க்கப்பட்டது. தனது ராஜ்ஜியத்தில் உள்புற கிளர்ச்சிகள் மற்றும் வெளிப்புற அச்சுறுத்தல்கள் இருந்தாலும் தனது ராஜ்ஜியத்தை வெற்றிகரமாக பாதுகாத்தார்.
ராஜதந்திரத் திறன்;
அவர் ஒரு மென்மையான ராஜதந்திர அணுகுமுறையை பயன்படுத்தினார். சுதேச அரசுகளுக்கு இடையிலான மோதல்களில் ஒரு வெற்றியாளராக விளங்கிய, அதே சமயத்தில் தர்மத்தை தூண்டும் சத்திரிய தாயாக விளங்கினார். பல விசுவாசமான திறமையான அதிகாரிகளை இராணுவ தலைவராகவும் ராஜதந்திரத்துக்காகவும் நியமித்தார்.
வர்த்தகம்/வணிக மேம்பாடு.;
மகேஸ்வரில் ஒரு செழிப்பான ஜவுளித்தொழிற்சாலையை நிறுவினார். இதனால் மகேஸ்வரி புடவைகள் பிரபலமானது. இந்தியா முழுவதுமிருந்து திறமையான கைவினைஞர்களை அழைத்து வந்து உள்ளூர் கைவினைஞர்களுக்கு பயிற்சி கொடுக்க வைத்தார். விவசாய உற்பத்தி திறனை ஊக்குவித்து, பேரிடர்களின்போது வரி நிவாரணம் அளித்தார். தொழில்முனைவோர் மற்றும் புதுமைகளை ஊக்குவித்ததால் அவரது ஆட்சி பொருளாதார வளர்ச்சி பெற்றிருந்தது.
தத்துவஞானி ராணி;
அவரது அரசவை அறிவுஜீவிகள், கவிஞர்கள், இசைக் கலைஞர்கள் துறவிகளுக்கான மையமாக இருந்தது. பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியர் ஜான் கி அவருடைய அறிவையும் ஞானத்தையும் போற்றும் வண்ணம் அவரை தத்துவஞானி ராணி என்று அழைத்தார். அவரது ஆட்சி ஒரு பொற்காலமாக கருதப்படுகிறது.
சமூக சீர்திருத்தவாதி;
பெண்களின் உரிமைகள் மற்றும் கல்வியை ஊக்குவித்தார். விதவை மறுமணத்தை ஆதரித்தார். இதனால் அவர் கண்ணியம் பக்தி மற்றும் தைரியத்தின் கலங்கரை விளக்கமாக புகழப்படுகிறார். ஜவஹர்லால் நேரு தனது டிஸ்கவரி ஆப் இந்தியா புத்தகத்தில் அவரை ஒரு குறிப்பிடத்தக்க பெண் என்று விவரித்திருக்கிறார். அவரது நினைவாக இந்தோர் விமான நிலையத்திற்கு அஹில்யா பாய் விமான நிலையம் என்று பெயரிடப்பட்டுள்ளது.