

-லக்ஷ்மி மோகன்
"என்ன யோசனை ரம்யா, சாப்பிட வரலையா?" என்றபடியே வந்தாள் அனு.
"ம்... வரேன் என்று லஞ்ச்பேகை எடுத்துக்கொண்டு அவளுடன் நடந்தாள் ரம்யா.
''என்னாச்சுடி, ஏன் ஒரு மாதிரியா இருக்கே?'' என்றாள் அனு.
''இன்னிக்கு அஜய் ஸ்கூலில் பேரண்ட்ஸ் மீட். சிவாகிட்ட போன் பண்ணி வரச்சொன்னேன். வழக்கம்போல கத்தறார். அவங்க பிரின்ஸிபலோ, 'அஜய் அப்பா வரமாட்டாரா?' எப்பவும் நீங்க மட்டும்தான் வருவீங்களா அம்மா அப்பா இரண்டு பேருக்கும் கவுன்ஸிலிங் முக்கியம், அப்படிங்கறாங்க" என்று அலுத்துக்கொண்டாள்.
"ஒருநாள் சிவா நல்ல மூட்ல இருக்கும்போது எடுத்துச் சொல்ல வேண்டியதுதானே?" என்றாள் அனு.
"என்னத்த நல்ல மூட்? நாலு வயசு அஜய்யின் நடவடிக்கைகள் சாதாரணமா இல்லை, பேச்சும் வரலைன்னு நான்கு மாசம் முன்னாடி டாக்டரைப் போய்ப் பார்த்தோம். 'அஜய் இஸ் அன் ஆடிஸம் பாய்'னு சொன்னதுலருந்து வீட்ல ஒரே பிரச்னைதான். எங்கக் குடும்பத்துல யாரும் இப்படி இல்ல. உங்க ஃபேமிலில என்ன பிராப்ளமோ?"னு குதிக்கறாரு.
எப்போ பார்த்தாலும் கத்திக்கொண்டும், முரண்டுபிடிச்சு அழுதுகிட்டும் அஜய் இருக்கான். வீட்டுக்கு எப்படி என் கிளையன்ட்ஸ், பிரெண்ட்ஸ்லாம் வருவாங்கன்னு சலிச்சுக்கறார். எப்பப் பார்த்தாலும் கோபமும் சண்டையும்தான். எனக்கு வீட்டுக்குப் போகவே வெறுப்பா இருக்கு அனு" என்று முடித்தவளின் இரு கன்னத்திலும் நீர் கோடிட்டிருந்தது.
''இங்கே பாரு, கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாயிடும். கை காஞ்சு போச்சுப் பாரு. சாப்பிடு" என்று அவளைத் தேற்றினாள் அனு.
''எனக்குப் பசிக்கலை" என்றபடியே பாதி சாப்பாட்டை அப்படியே மூடி எடுத்துக்கொண்டு, "சாயங்காலம் போறதுக்குப் பெர்மிஷன் கேக்கணும். மேனேஜர் போயிடப்போறார்" என்றபடியே அவர் அறைக்குள் நுழைந்தாள் ரம்யா.
அன்றைய மீட்டிங்கில் ஒரு ஸ்பெஷல் குழந்தைக்கு பெற்றோர் இருவரும் எந்த அளவுக்கு உறுதுணையா இருக்க வேண்டும், இருக்க முடியும் என்று விரிவாகப் பேசினார்கள். ஓர் ஆடிஸக் குழந்தையின் அப்பா, தான் தினமும் ஆபீஸிலிருந்து திரும்பியவுடன் தம் மகனை வாக் அழைத்துப் போவதால் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள முடிகிறது என்றார்.
ஒரு குழந்தையின் அம்மா, "தினமும் என் கணவர் இவளை செடிக்குத் தண்ணீர்விடப் பழக்குகிறார். குழந்தையும் அதனை என்ஜாய் பண்ணுகிறது" என்றார் சந்தோஷமாக.
அதனைக் கேட்டுக்கொண்டிருந்த ரம்யாவுக்கு கடந்த வாரம் நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது.