பெண்களே உஷார்! அறுவை சிகிச்சைக்கு வழிவகுக்கும் 'புடவை புற்றுநோய்'!

Women in saree
Women in saree - saree cancer
Updated on

'பல நூற்றாண்டுகளாக இந்தியப் பெண்களின் அடையாளமாகத் திகழும் புடவை, தவறான முறையில் கட்டப்படும்போது 'புடவை புற்றுநோய்' (Saree Cancer) எனும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.'

அதிர்ச்சியளிக்கும் செய்தியாக தோன்றுகிறது அல்லவா? அதே வேளையில் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய ஒரு செய்தியாகும்.

'புடவை புற்றுநோய்' என்றால் என்ன?

புடவை புற்றுநோய் என்பது இடுப்புப் பகுதியில் தோன்றும் ஒரு வகை சரும புற்றுநோயாகும் (Squamous Cell Carcinoma).

பல ஆண்டுகளாக இடுப்பில் மிக இறுக்கமாகப் புடவை கட்டுவதால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது.

புடவையின் உள்பாவாடை கயிற்றினால் (Petti-coat string) இடுப்பில் ஏற்படும் தொடர்ச்சியான உராய்வு, அழுத்தம் மற்றும் எரிச்சல் ஆகியவை காலப்போக்கில் சருமத்தில் பாதிப்பை உண்டாக்குகின்றன.

இது நாளடைவில் புற்றுநோய் மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.

ஆரம்பகால அறிகுறிகள் எவ்வாறு தென்படும்.

இது மிகவும் மெதுவாக உருவாவதால், இதன் அறிகுறிகளைப் பெண்கள் பெரும்பாலும் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள்.

  • இடுப்புப் பகுதியில் நீண்ட நாட்களாகத் ஆறாத புண் அல்லது தழும்பு.

  • இடுப்புப் பகுதியில் சருமத்தின் நிறம் மாறுதல் (அடர் நிறமாக மாறுவது).

  • சருமம் தடித்தல் அல்லது செதில் செதிலாக உதிர்தல்.

  • தொடர்ச்சியான அரிப்பு அல்லது எரிச்சல்.

இதையும் படியுங்கள்:
சூப்பர் மார்க்கெட்ல பொருள் வாங்குறதுக்கு முன்னாடி இந்த 5 கெமிக்கல் இருக்கான்னு செக் பண்ண மறந்துடாதீங்க!
Women in saree

இந்த நோய் தீவிரமாக காணப்பட்டால் முதன்மையான தீர்வுகளில் ஒன்று அறுவை சிகிச்சை (Surgery) ஆகும்.

​ஆரம்ப நிலை சிகிச்சை:

பாதிப்பு ஏற்பட்ட சரும பகுதியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிடலாம். எவ்வளவு சீக்கிரம் இதைக் கண்டறிந்து சிகிச்சை பெறுகிறோமோ, அவ்வளவு சிறந்தது.

தீவிர நிலை: ஒருவேளை நோய் முற்றிய நிலையில் இருந்தால், பாதிக்கப்பட்ட சருமத்தின் பெரிய பகுதியை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும்

கூடுதல் சிகிச்சைகள்: சருமத்தை அகற்றிய பிறகு அந்த இடத்தை ஈடுகட்ட சருமம் ஒட்டுதல் (Skin Grafting) முறை பயன்படுத்தப்படலாம். மேலும், புற்றுநோய் செல்களை முழுமையாக அழிக்க கதிர்வீச்சு சிகிச்சை (Radiation) போன்ற பிற சிகிச்சை முறைகளும் தேவைப்பட வாய்ப்புள்ளது.

இந்த பாதிப்பைத் தவிர்க்க சில எளிய மாற்றங்களைச் செய்தாலே போதுமானது:

  • இறுக்கத்தைத் தவிர்க்கவும்: உள்பாவாடை கயிற்றை இடுப்பில் ரத்தம் ஓடாத அளவிற்கு மிக இறுக்கமாகக் கட்டக் கூடாது.

  • மெல்லிய கயிற்றுக்குப் பதிலாக, அழுத்தத்தைப் பகிர்ந்து கொடுக்கக்கூடிய அகலமான 'பெல்ட்' போன்ற பட்டைகள் அல்லது 'இலாஸ்டிக்' (Elastic) கொண்ட உள்பாவாடைகளைப் பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
மாத்திரை இல்லாமல் இரத்த அழுத்தத்தை குறைக்க முடியுமா? மருத்துவர்கள் பரிந்துரைக்கும் DASH ரகசியம்!
Women in saree
  • எப்போதும் ஒரே இடத்தில் புடவையைக் கட்டாமல், அவ்வப்போது இடுப்பின் உயரத்தை சற்று ஏற்றியோ அல்லது இறக்கியோ கட்டுவது உராய்வைத் தவிர்க்க உதவும்.

  • வியர்வை மற்றும் அழுக்கு சேராமல் இருக்க இடுப்புப் பகுதியைச் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். குறிப்பாக வெயில் காலங்களில் பருத்தி (Cotton) உடைகளை அணிவது சிறந்தது.

  • ​சுருக்கமாகச் சொன்னால், இடுப்பில் ஆறாத புண்களோ அல்லது தோல் மாற்றங்களோ இருந்தால், காலம் தாழ்த்தாமல் மருத்துவரை அணுகுவது பெரிய அளவிலான பாதிப்புகளைத் தவிர்க்க உதவும்.

ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், மற்ற சரும புற்றுநோய்களைப் போலவே இதையும் எளிதாகக் குணப்படுத்த முடியும். விழிப்புணர்வுடன் இருப்பதே சிறந்த பாதுகாப்பு.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com