

பெண்மை என்றாலே மென்மை, விட்டுக்கொடுத்தல், அடக்கம் என்று மட்டுமே பார்க்கப்பட்ட காலம் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது. இன்று பெண்மை என்பது மனவலிமை, தெளிவான சிந்தனை மற்றும் அசைக்க முடியாத தன்னம்பிக்கையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. சமீபகாலமாகச் சமூக வலைதளங்களில் 'Miss Matured' (முதிர்ச்சியடைந்த பெண்) என்ற வார்த்தை மிகவும் பிரபலமாகி வருகிறது. இது வெறும் ஸ்டேட்டஸ் போடுவதற்கான சொல் அல்ல; இது இன்றைய ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்வில் அடைய வேண்டிய ஒரு உன்னதமான மனநிலை.
யார் இந்த முதிர்ச்சியுள்ள பெண்?
பொதுவாக 'முதிர்ச்சியான மனநிலைக்கும் வயதுக்கும் சம்பந்தம்மில்லை. அது ஒரு பெண் இந்த உலகத்தை எப்படிப் பார்க்கிறாள்; தன்னைத் தானே எப்படிப் புரிந்து கொள்கிறாள் என்பதில் இருக்கிறது. ஒரு முதிர்ச்சியுள்ள பெண், தன் வாழ்க்கையின் கடிவாளத்தைத் தன் கைகளிலேயே வைத்திருப்பாள். மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை விட, தான் தன்னை எப்படி உணர்கிறோம் என்பதற்கு அவள் அதிக முக்கியத்துவம் கொடுப்பாள்.
முதிர்ச்சியுள்ள பெண்ணின் ஐந்து முக்கியப் பண்புகள்:
1. பிறரின் அங்கீகாரத்தை எதிர்பாராமல் இருப்பது:
நம்மில் பலருக்கு இருக்கும் ஒரு பெரிய பலவீனம், “மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ?” என்ற பயம். ஒரு முதிர்ச்சியுள்ள பெண்ணுக்கு இந்தப் பயம் இல்லை. தான் உடுத்தும் உடை, பேசும் விதம், எடுக்கும் முடிவுகள் மற்றவர்களுக்குப் பிடிக்குமா என்று அவள் கவலைப்படுவதில்லை. தனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ, அதைத் துணிச்சலாகச் செய்வாள். மற்றவர்கள் தரும் 'அனுமதி'க்காக அவள் காத்திருப்பதில்லை. அவளது மகிழ்ச்சி அவளது கைகளில் மட்டுமே இருக்கிறது.
2. உணர்ச்சிகளை ஆளும் திறன்:
சின்னச் சின்ன விஷயங்களுக்கு உணர்ச்சிவசப்படுவதோ அல்லது மற்றவர்கள் தன்னை காயப்படுத்திவிட்டார்கள் என்று அழுது கொண்டிருப்பதோ முதிர்ச்சியின் அடையாளமல்ல. ஒரு முதிர்ச்சியுள்ள பெண், தன் உணர்ச்சிகளைக் கையாளத் தெரிந்தவள். யாராவது தன்னை விமர்சித்தால், கோபப்பட மாட்டாள். அந்த விமர்சனம் உண்மையாக இருந்தால் அதைச் சரி செய்வாள்; இல்லையென்றால், அதை ஒரு தூசியைப் போலத் தட்டிவிட்டுத் தன் வேலையைப் பார்ப்பாள். 'அமைதி' என்பதுதான் அவளது மிகப்பெரிய ஆயுதம்.
3. சுயமரியாதையும் எல்லைகளும்:
எந்த ஒரு உறவிலும் அது நட்போ, காதலோ அல்லது குடும்பமோ தனது சுயமரியாதையை விட்டுக்கொடுக்காமல் இருப்பதே உண்மையான முதிர்ச்சி. தனக்கு எது பிடிக்காது என்பதைத் தெளிவாகச் சொல்லத் தெரிந்தவள் அவள். 'இல்லை' என்று சொல்ல வேண்டிய இடத்தில் தயங்காமல் சொல்வாள். மற்றவர்கள் தன் மீது ஆதிக்கம் செலுத்த அவள் அனுமதிப்பதில்லை. அதே சமயம், அவள் மற்றவர்களின் சுதந்திரத்தையும் சமமாக மதிப்பவள்.
4. தனிமையைக் கொண்டாடுதல்:
எப்போதும் யாராவது ஒருவரின் துணையைத் தேடாமல் தனது தனிமையை ரசிப்பாள். தனிமையை தன்னை மேம்படுத்திக் கொள்ளப் பயன்படுத்துவாள். புத்தகம் படிப்பது, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது அல்லது தனக்குப் பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது எனத் தனது உலகத்தை அவளே அழகாக்கிக் கொள்வாள். தனக்குத் தானே சிறந்த தோழியாக அவள் இருப்பாள்.
5. சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சல்:
வாழ்க்கை என்பது எப்போதும் பூக்கள் நிறைந்த பாதையாக மட்டும் இருக்காது. தோல்விகள் வரும்போது துவண்டு போகாமல், அதிலிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டு மீண்டும் எழுந்து நிற்பதே முதிர்ச்சி. ஒரு முதிர்ச்சியுள்ள பெண் தன் வாழ்க்கையில் நடக்கும் தவறுகளுக்கு அடுத்தவர்களைக் குறை கூற மாட்டாள். தனது முடிவுகளுக்கும், அதன் விளைவுகளுக்கும் அவளே முழுப் பொறுப்பேற்பாள். அந்தத் துணிச்சலே அவளை ஒரு தலைவியாக மாற்றுகிறது.
இன்றைய நவீன உலகில், பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேறுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் மனரீதியாக முதிர்ச்சியடைவது. அது ஒரு மகுடம் போன்றது. அதை ஒரு பெண் சூட்டிக்கொள்ளும்போது, அவள் அழகாகத் தெரிவதோடு மட்டுமல்லாமல், இந்தச் சமூகத்திற்கு ஒரு மிகச்சிறந்த முன்னுதாரணமாகவும் திகழ்கிறாள்.