மன அழுத்தம் ஏன் ஏற்படணும்!

Mental stress
Mental stress
Updated on

- பி.ஆர். இலட்சுமி

  • ஒரே செயலைத் திரும்பத் திரும்பச் செய்தல்

  • ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்தல்

  • தாழ்வு மனப்பான்மை

  • ஈகோ பிரச்னை

  • பொறாமை போன்றவற்றினால் மனஅழுத்தம் அதிகமாகும்.

மன அழுத்தம் ஏற்பட்டால் இரவு உறக்கம் பாதிக்கப்படும். தூக்கம் பாதி போனாலே ஆயுளும் குறையும். இதெல்லாம் நாம் வாழும் வாழ்க்கைக்குத் தேவையா?

பெண்மணிகளுக்கு மன அழுத்தம் ஏற்பட திரும்பத் திரும்ப அவர்கள் செய்யும் வேலைகள் காரணம். காலை எழுந்தது முதல் காபி போடுவதில் இருந்து இரவு பால் காய்ச்சி குடும்பத்தினருக்கு கொடுத்து தூங்கச் செல்வது வரை தொடர்ந்து தினமும் செய்துவருவதால் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

அவர்களுக்கு தான் செய்யும் பணியில் திருப்தி இருந்தாலும் அதை அவர்களது கடமையாகவே நினைக்கின்றனர். குடும்ப உறுப்பினர்கள் அமர்ந்து பேசினாலும் பரவாயில்லை என்று நினைப்பவர்கள் நிறைய பேர் உண்டு. வேலையைத் தம்முடன் பகிர்ந்துகொள்வார் இல்லையே என்பதுகூட அவர்களது மனது அழுத்தத்திற்குக் காரணமாகிறது. ஆனால், வீட்டில் உள்ள உறுப்பினர்கள் அதைப் புரிந்துகொள்வதே கிடையாது. என் குழந்தை எட்டு மணிக்குத்தான் படுக்கையில் இருந்து எழுவான் என்பதைப் பெருமையாக நினைக்கும் பெற்றோர்களை நாம் என்ன சொல்லமுடியும்?

இன்னும் சில வீடுகளில் சாப்பிட்ட தட்டுகளையும் காபி குடித்த தம்ளர்களையும் அங்கேயே போட்டு விட்டு செல்லும் பழக்கத்தைக் கடைபிடிக்கிறார்கள். அவரவர் சாப்பிட்ட தட்டு, தம்ளரை அவரவர் கழுவி வைக்கும் வீடுகளை விரல் விட்டு எண்ணி விடலாம். சின்னச் சின்ன ஒத்தாசை செய்வது நமது உடலுக்கும் நல்லது என்பதை அவர்களுக்குப் புரிய வைக்கலாமே!

இதே நிலைப்பாடுதான் அலுவலகத்திலும் தொடர்கிறது. ஒரே நேரத்தில் பல செயல்களைச் செய்வதும் அவர்களது மனது அழுத்தத்திற்குக் காரணமாக அமைகிறது. அலுவலகத்தில் கணினியில் மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பும் சமயத்தில் போன் காலை எடுக்கச் சொல்வது, அதே நேரத்தில் மேலாளர் மணியை அழுத்தி அழைப்பது, வாட்ஸ்அப்பில் வரும் தகவலுக்குப் பதில் சொல்வது என அஷ்டவதானி போல் பல பணிகளைச் செய்வதால் மன அழுத்தம் அதிகரிக்கத்தானே செய்யும்!

மன அழுத்தம் குறைய எந்த ஒரு வேலையையும் சரியாகத் திட்டமிட்டு செய்யலாம். முதலிலேயே நம்முடைய வேலையில் வரும் சிக்கல்களைக் கணக்கிட்டு அதற்கான மாற்று வழியை யோசிக்க வைத்து செயல்படலாம். அலுவலகத்தில் பணி இருந்தால் சிக்கல்கள் வரத்தானே செய்யும்.

இதையும் படியுங்கள்:
பெண்களே சமையலறையில் அதிக நேரம் நிற்க வேண்டாம்: மருத்துவர் எச்சரிக்கை!
Mental stress

வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்ள நினைக்காத ஆண்கள் மத்தியில்தான் பெண்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். பெண்கள், பிரச்னை இருக்கும் இடத்தை விட்டு சிரித்த முகத்துடன் உடனே வெளியேறி விட வேண்டும். நன்கு யோசித்து முடிவு எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் ஒருநாள் பணி விடுப்பு எடுத்துக்கொண்டு மகிழ்ச்சி நமக்கு எங்கு கிடைக்கிறதோ அங்கு சென்று அனைவரிடமும் கலந்து பேசி முடிவெடுக்கலாம் அல்லவா…

ஒரு மளிகைக் கடைக்காரரைப் பார்த்து பெண்களால் என்ன கற்றுக்கொள்ள முடியும்? மூன்று, நான்கு வாடிக்கையாளர்களை ஒருவரே சிரித்தபடி சமாளிப்பார். எல்லோருக்கும் பொருள் எடுத்துக் கொடுக்க வேண்டும், கணக்கு போட்டு பணமும் வாங்க வேண்டும். இதில் கடைக்காரர் வாடிக்கையாளரை இழக்காமல் இருக்க அத்தனை பேருக்கும் ஆளுக்கு ஒரு பொருளை எடுத்து வைப்பார். ஒருவரை மட்டும் கவனிக்கும் நேரத்தில் அடுத்த வாடிக்கையாளர் சென்று விடக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருப்பார். அவர்களை நலம் விசாரித்தபடியும் இருப்பார். ஒரு சிறு உபாயம்தான் இது... அந்தக் கடைக்காரர்களுக்கு அந்த மாதிரி வேலை செய்து பழகிவிட்டதால் அவருக்கு மன அழுத்தம் சற்று குறைவாகவே இருக்கும். இவ்வளவு வேலை செய்ய வேண்டியது இருக்கிறது என அவர் நினைப்பது கிடையாது. நம்மாலும் இவ்வளவு வேலை செய்ய முடியும் என்று செய்யும் பணியை மன நிறைவோடு செய்வதால் அவருக்கு இத்தனை மணி நேரம் வேலை செய்தோம் என்பது பெரிய பொருட்டாக தெரிவது கிடையாது. எவ்வளவு நாம் பணி செய்தாலும் அவற்றை முழு ஈடுபாட்டுடன் வேலை செய்தோம் என்பது சிறந்த அளவுகோலாக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com