கழுகு மற்ற பறவைகளைக் காட்டிலும் உயரமாகத்தான் பறக்கும். ஏனெனில் அதற்குத் தெரியும் காகம், கிளி போன்ற பறவைகளுடன் பறந்தால் தன் உயரத்தை அடைய முடியாது என்று. அதேபோல் மற்ற பறவைகளுக்குக் கழுகைப் போல் உயரப் பறக்கும் திறனோ, சக்தியோ நிச்சயம் கிடையாது. அதேபோல் நாமும் நம் எண்ணங்களை உயர்ந்ததாக வைக்க வேண்டும். உயர்ந்த எண்ணங்களை உடையவர்களுடன் பழக வேண்டும். அதை விட்டு சாதாரணமாக இருக்கும் மனிதர்களுடன் குறிக்கோள் இல்லாத மனிதர்களுடன் பழகினால் நாமும் குறிக்கோள் இல்லாதவர்களாகத்தான் இருப்போம். சாதாரணமானவர்களாகத்தான் இருப்போம். "உன் நண்பன் யார் என்று சொல்; நீ யார் என்று சொல்கிறேன்" என்ற சொலவடை நாம் கேள்விபட்டிருப்போம். உயர்ந்த எண்ணங் களுடையவருடன் பழகினால் நம் எண்ணமும் செயலும் அவர்களைப்போல் மாறும்.
உயரப் பறக்கும் கழுகு 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தன் இறையையும் தெளிவாகப் பார்க்கும் திறன் உடையது. அந்த இறைக்கு இடையூறாக எந்த தடைகள் வந்தாலும் அதனைத் தாண்டி தன் இறையைக் கூர்ந்து கவனிக்கும். அதேபோல் நாமும் நம் இலக்கை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போது எந்த தடைகள் வந்தாலும், பிரச்னைகள் வந்தாலும் அவைகளைத் தகர்த்துவிட்டு நம் பார்வை இலக்கை நோக்கி மட்டுமே பயணிக்க வேண்டும்.
கழுகின் இறை எவ்வளவு பெரிதாக இருந்தாலும் எவ்வளவு வலிமை வாய்ந்ததாக இருந்தாலும் அந்த இறையை அடையும் வரையில் அது போராடிக்கொண்டே இருக்கும். பயம் என்பதை சற்றும் அறியாத பறவைகளின் ராஜா இந்த கழுகு. வாழ்வில் வெற்றி பெற்ற மனிதர்கள் பலரும், தங்கள் வாழ்வில் எவ்வளவு பிரச்னை வந்தாலும், எத்தனை கஷ்டங்கள் வந்தாலும், எத்தனை தடைகள் வந்தாலும், அவர்கள் இலக்கினை அடையாமல் இருக்கப் பல காரணங்கள் இருந்தாலும், அவைகளையும் மீறி வெற்றி பெற்றவர்களாக இருப்பார்கள். அந்தக் கழுகின் பயமறியா பண்பை நாமும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
மற்ற பறவைகள் எல்லாம் புயலோ, மழையோ வந்தால் மரத்தை அல்லது பாதுகாப்பான இடத்தை தேடிச் செல்லும். ஆனால், கழுகு அப்படி எந்த இடத்திற்கும் செல்லாது. மழையுடனும் புயலும் போராடும். அப்படிப் போராடி மேகத்தைவிட உயரமாகப் பறக்கும். வாழ்விலும் இதுபோல சிலர் நம்மையும் போராட்டத்திற்குள் சிக்க வைப்பார்கள். புயல், மழை போல் நம் வாழ்விலும் புறம் பேசுவார்கள். கேலி செய்வார்கள். அதனைப் பொறுத்துக்கொண்டு அதை ஒரு சக்தியாக மாற்றி அவர்களைவிட நம் வாழ்வில் உயரமான இடத்தை நாம் அடைய வேண்டும்.
கழுகு ஒருபோதும் பிறவிலங்குகள் வேட்டையாடி இறந்துகிடக்கும் இறையை உண்ணாது. அதேபோல் தான் வேட்டையாடிய உணவு மீதி இருந்தாலும் அதையும் உண்ணாது. தனக்கான உணவை எப்போதும் தானே வேட்டையாடி உண்ணும். அதேபோல் நமக்கான வெற்றியை நாம்தான் தேட வேண்டும். வேறு யாராவது ஒருவர் நமக்கான வெற்றியைத் தேடித் தருவார் என்று ஒருபோதும் மற்றவர்களைச் சார்ந்து வாழக்கூடாது.
கழுகுகளிடமிருந்து இந்த ஐந்து பண்புகளையும் கற்றுக் கொள்ளும் மனிதன் நிச்சயம் வாழ்வில் வெற்றியை அடைவான்.