ரத்த விருத்தி செய்யும் பாலக்கீரைப் பொறியல்!

ரத்த விருத்தி 
செய்யும்  பாலக்கீரைப் பொறியல்!

கீரை வகைகளில் பாலக்கீரை ஏராளமான சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது. அதிகப்படியான இரும்பு சத்து மற்றும் விட்டமின்களை கொண்டுள்ள இந்த பாலக்கீரை உடலின் ரத்த அளவை அதிகரிக்கிறது. அடிக்கடி செய்து சாப்பிட்டால் பலநோய்களிலிருந்து நிவாரணம் காணலாம். இந்த பாலக்கீரை எப்படி எளிதாக செய்வது?

பாலக் கீரை பொரியல் செய்ய தேவையான பொருட்கள்:

பாலக்கீரை – ஒரு கட்டு,

சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்,

கடுகு – அரைடீஸ்பூன்,

உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்,

வரமிளகாய் – நான்கு,

பூண்டு பல் – நான்கு,

சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி அளவு,

கருவேப்பிலை – ஒரு கொத்து,

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,

தேங்காய் துருவல் – அரை கப்,

உப்பு – தேவையான அளவு.

பாலக் கீரை பொரியல் செய்முறை விளக்கம்:

பாலக் கீரையை முதலில் தடிமனான தண்டுகளை தவிர மற்ற மெல்லியதண்டுகளுடன் சேர்த்து ஆய்ந்து வைத்துக் கொள்ளுங்கள். பின்பு நன்கு கழுவிசுத்தம் செய்து தண்ணீர் எதுவும் இல்லாமல் பொடி பொடியாக நறுக்கி ஒருபாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான மற்ற எல்லாபொருட்களையும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயத்தைதோல் உரித்து பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும்கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து சேர்த்துபொன்னிறமாக வறுக்க வேண்டும். இதனுடன் நாலு பல் பூண்டை இடித்துசேருங்கள். ஒரு கொத்து கருவேப்பிலையையும் போட்டுக் கொள்ளுங்கள்.

காரத்திற்கு நான்கு வர மிளகாய்களை காம்பு நீக்கி இரண்டாக உடைத்து போட்டுக்கொள்ளுங்கள். பின்னர் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்குவதக்குங்கள். ரெண்டு நிமிடம் நன்கு வதங்கிய பிறகு கொஞ்சம் மஞ்சள் தூள், தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கலந்து விடுங்கள். இப்போது நீங்கள் நறுக்கி வைத்துள்ள பாலக்கீரை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தண்ணீர் எதுவும் சேர்க்கக்கூடாது அதுவே தண்ணீர் விட ஆரம்பிக்கும்.

கீரை ஒன்று சேர்ந்து வந்த பிறகு அடுப்பை அணைத்து தேங்காய் துருவலை சேர்த்து பரிமாற வேண்டியது தான். ரொம்ப சுவையாக இருக்கக்கூடிய இந்த பாலக்கீரை ரெசிபி .இதை சாதத்துடன் அப்படியே பிசைந்து சாப்பிட்டாலும் சுவை யாக இருக்கும். ரசம் சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதத்துக்கு சைட்டிஷ் ஆக வைத்துக் கொண்டாலும் ருசியாக இருக்கும்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com