

இந்தியாவில் வங்கிகளும், தனியார் நிறுவனங்களும் பொதுமக்களுக்கு காப்பீட்டு சேவையை வழங்கி வருகின்றன. தற்போதைய சூழலில் காப்பீடு எடுப்பதன் முக்கியத்துவத்தை பொதுமக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர்.
குறிப்பாக கொரோனா காலகட்டத்திற்கு பிறகு காப்பீடு எவ்வளவு முக்கியம் என்பதை பொதுமக்கள் உணர தொடங்கினர். இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கட்டணமின்றி ஆயுள் காப்பீடு மற்றும் விபத்து காப்பீடு சேவையை தமிழக அரசு வழங்கி வருகிறது.
இதற்காக கடந்த ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி 7 முன்னணி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்நிலையில் தற்போது அரசு ஊழியர்களுக்கு காப்பீடு வழங்கும் சேவையில் கூடுதலாக 3 வங்கிகள் இணைந்துள்ளன.
இதன் மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கிடைக்கும் காப்பீடு சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த காப்பீட்டு திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு ரூ.1 கோடி வரை காப்பீடு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் காப்பீட்டு திட்டத்தில் தற்போது மூன்று புதிய வங்கிகள் இணைந்து இருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக தமிழக அரசு அரசாணையை வெளியிடுட்டுள்ளது.
இதுகுறித்து தமிழகத்தின் நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் கூறுகையில், “கடந்தாண்டு மே 19-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அரசு ஊழியர்களுக்கு காப்பீடு உள்ளிட்ட சேவைகளை வங்கிகள் வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்படி ஆயுள் காப்பீட்டில் அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி ரூ.10 லட்சம் மற்றும் தனிநபர் விபத்து காப்பீட்டில் ரூ.1 கோடி வரையிலும் கிடைக்கும். இது தவிர அரசு ஊழியர்கள் தனிப்பட்ட விபத்துகளால் உயிரிழக்கும் போது, அவர்களின் குழந்தைகளின் கல்விக்கும், திருமணமாகாத பெண்களின் திருமணச் செலவுக்கும் உதவித்தொகை வழங்கப்படும்.
இந்தியன் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, கனரா வங்கி, பேங்க் ஆப் பரோடா மற்றும் யூனியன் வங்கி உள்ளிட்ட 7 முன்னணி வங்கிகள் அரசு ஊழியர்களுக்கு காப்பீட்டை வழங்கி வருகின்றன.
இந்நிலையில் தற்போது இந்த காப்பீட்டு சேவையை வழங்குவதில் கூடுதலாக பேங்க் ஆப் இந்தியா, தமிழ்நாடு மாநில கூட்டுறவு தலைமை வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட 3 வங்கிகள் இணைந்துள்ளன.
இதன் மூலம் தற்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மொத்தம் 10 வங்கிகள் கட்டணமின்றி இலவசமாக காப்பீட்டை வழங்கும்” என அவர் தெரிவித்தார்
அரசு ஊழியர்களின் எதிர்கால நலனில் அக்கறை கொண்டே இலவச காப்பீட்டு திட்டம் தமிழக அரசால் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் இத்திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக தற்போது இதில் கூடுதலாக மூன்று வங்கிகள் இணைந்திருப்பது அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.