

இந்தியாவில் மிகவும் பிரபலமான அமுல் (Amul) நிறுவனம் பால், வெண்ணெய், பாலாடைக்கட்டி (Cheese), நெய், தயிர், ஐஸ்கிரீம், சாக்லேட், மிட்டாய் வகைகள், நறுமண பால் (Kool), மற்றும் பன்னீர் போன்ற பல்வேறு வகையான பால் சார்ந்த பொருட்களைத் தயாரிக்கிறது. மேலும், பிரட் ஸ்ப்ரெட், பிரீமியம் பானங்கள், ஆர்கானிக் தயாரிப்புகள் மற்றும் புரதம் நிறைந்த (Protein) பொருட்கள் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட பொருட்களை சந்தைப்படுத்தும் அமுல் தயாரிப்புகள் ISO 9001-2000 தரச்சான்று பெற்றவை. இது "இந்தியாவின் சுவை" (The Taste of India) என அறியப்படுகிறது.
இந்நிலையில் ராஜஸ்தான் உணவு பாதுகாப்புத் துறை ஜெய்ப்பூரில் அமுல் நிறுவனத்தின் சுமார் 1.5 லட்சம் கிலோ எடையுள்ள காலாவதியான பால் அல்லாத உணவுப் பொருட்களை அழித்துள்ளது. இவை காலாவதியான தேதியை அழித்துவிட்டு புதிய தேதியிட்டு விற்பனை செய்யத் தயாராக வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஜெய்ப்பூரின் முக்கிய பகுதியில் 'மெசர்ஸ் அத்லெட் டிஸ்ட்ரிபியூட்டர்' (Messrs Athlete Distributor)என்ற நிறுவனத்தில் காலாவதியான பொருட்களை பழைய தேதியை அழித்துவிட்டு புதிய தேதியிட்டு விற்பனை செய்ய உள்ளதாக 181 உதவி எண்ணிற்கு புகார் வந்ததையடுத்து அந்த இடத்தை ஆய்வு செய்ய தலைமை மருத்துவ அதிகாரி தலைமையிலான குழு அங்கு சென்றது. ஆய்வின் போது, அதிகாரிகள் ஒரு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான உணவு அட்டைப்பெட்டிகளைக் கண்டறிந்தனர்.
அங்கு கைரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தால் தயாரிக்கப்பட்டு மெசர்ஸ் அத்லெட் டிஸ்ட்ரிபியூட்டர் மூலம் வழங்கப்பட்ட அமுல் பிராண்டின் கீழ் விற்கப்படும் பல பால் அல்லாத பொருட்களான நூடுல்ஸ், கெட்ச்அப், மயோனைஸ் மற்றும் எனர்ஜி பானங்கள் போன்றவை இருந்தது கண்டறிப்பட்டது. சோதனையின் போது காலாவதியான பொருட்கள் அடங்கிய கிட்டத்தட்ட 12,000 அட்டைப்பெட்டிகள் மீட்கப்பட்டதாகவும், சுமார் 3,000 அட்டைப்பெட்டிகளில், பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்ட காலாவதி தேதிகள் அழிக்கப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேக்கேஜிங்கிலிருந்து அசல் தேதிகளை அகற்றப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் தின்னர், அசிட்டோன் மற்றும் பிற ரசாயனங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
'மெசர்ஸ் அத்லெட் டிஸ்ட்ரிபியூட்டர்' நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர், காலாவதியான இந்த உணவுப் பொருட்களில் புதிய தேதிகளைப் அச்சிட்டு, அவற்றை 4,500 புதிய அமுல் பிராண்ட் பெட்டிகளில் அடைத்து சந்தையில் லாபத்திற்கு விற்கத் தயாராகி வந்ததாக அவர்கள் கூறினர்.
இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு கூடுதல் ஆணையர் பகவத் சிங் கூறுகையில், ‘இவ்வளவு பெரியளவில் காலாவதியான உணவுகளைப் பார்த்து திகைத்துப்போனதாக கூறிய அதிகாரிகள், விசாரணையின் போது, காலாவதியான பொருட்களில் தேதியை எப்படி மாற்றுவது என்பதை யூடியூப் பார்த்துத் தெரிந்து கொண்டதாக அந்தத் தொழிலதிபர் தெரிவித்துள்ளார். கைப்பற்றப்பட்ட உணவுப்பொருட்களின் அளவு அதிகமாக இருந்தால் 27 லாரிகளில் ஏற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் சொந்தச் செலவிலேயே குப்பைக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு சுமார் நான்கு நாட்களாக அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், 'மெசர்ஸ் அத்லெட் டிஸ்ட்ரிபியூட்டர்' நிறுவனத்தின் உணவு உரிமமும் காலாவதியாகிவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் (FSSA) 2006-ன் கீழ் மெசர்ஸ் கைரா மற்றும் மெசர்ஸ் அட்வான்சிஸ் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளது.
காலாவதியாகும் நிலையில் இருந்த அமுல் பிராண்ட் பொருட்களை அந்தத் தொழிலதிபர் மிகக் குறைந்த விலைக்கு வாங்கி வந்ததாக நிறுவனப் பிரதிநிதிகள் கூறினர். தற்போது அந்தத் கிடங்கிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், அடுத்தகட்ட நடவடிக்கை வரை அந்த நிறுவனத்தின் உணவு வணிகச் செயல்பாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் காலாவதியான பொருட்களைச் சேமித்து வைத்தது, காலாவதி தேதியை அழித்துப் புதிய தேதியை அச்சிட்டு விற்க முயன்றது, உணவு உரிமம் இன்றி வணிகம் செய்தது, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை அந்த இடத்திலிருந்து அகற்றியது மற்றும் உணவுப் பாதுகாப்பு அதிகாரியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாதது ஆகிய குற்றங்களுக்காக 'மெசர்ஸ் அத்லெட் டிஸ்ட்ரிபியூட்டர்' நிறுவனத்தின் மீது எஃப்.எஸ்.எஸ்.ஏ (FSSA)-வின் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.