பூமியின் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், வானிலை ஆய்வாளர்களின் புதிய எச்சரிக்கை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. வலுவடைந்து வரும் எல் நினோ நிகழ்வு, 2027-ம் ஆண்டின் தொடக்கம் வரை நீடிக்கக்கூடும் என்பதால், வெப்ப அலை, வறட்சி, கனமழை, வெள்ளம் உள்ளிட்ட தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகரிக்கும் இயற்கையான காலநிலை நிகழ்வாகும். இந்த மாற்றம் கடலுடன் மட்டும் நின்றுவிடாமல், உலகின் பல பகுதிகளின் மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, 2026-ல் உருவாகியுள்ள எல் நினோ அடுத்த சில மாதங்களில் மேலும் வலுவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது 2027 பிப்ரவரி வரை நீடிப்பதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட நூறு சதவிகிதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் உலகின் பல பகுதிகளில் வழக்கத்திற்கு மாறான வானிலை நிலைகள் உருவாகலாம்.குறிப்பாக, சில நாடுகளில் கடுமையான வெப்ப அலைகளும் வறட்சியும் ஏற்படலாம். வேறு சில பகுதிகளில் அதிகப்படியான மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
விவசாயம், குடிநீர், மின்சாரம், சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற துறைகளிலும் இதன் தாக்கம் உணரப்படலாம். இந்தியாவிலும் பருவமழை மற்றும் வெப்பநிலை நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முக்கியமாகின்றன.
இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை வெளியிட்ட ஆகஸ்ட் 2026 தரவுகளும் கவலை அளிக்கின்றன. அந்த மாதத்தின் உலக சராசரி மேற்பரப்பு காற்று வெப்பநிலை 16.96 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.
இது பதிவுகள் தொடங்கிய காலத்திலிருந்து மிக வெப்பமான ஆகஸ்ட் மாதமாக அமைந்ததுடன், அனைத்து மாதங்களையும் ஒப்பிடும்போதும் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலைகளில் ஒன்றாக உள்ளது. தொழில்துறைக்கு முந்தைய காலத்தைவிட ஆகஸ்ட் வெப்பநிலை 1.65 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.
வலுவான எல் நினோ காலங்களில் கடல் மற்றும் வளிமண்டலத்தின் வெப்ப பரிமாற்றம் அதிகரிப்பதால், ஏற்கெனவே வெப்பமடைந்து வரும் பூமியில் கூடுதல் அழுத்தம் ஏற்படலாம். கடல் வெப்பநிலை உயர்வது கடல்வாழ் உயிரினங்களையும் பாதிக்கக்கூடும்.
அதிக வெப்பம் மனிதர்களுக்கு உடல் சோர்வு, நீரிழப்பு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவதோடு, முதியவர்கள் மற்றும் குழந்தைகள் போன்ற அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் சவாலாக அமையலாம். நகரங்களில் வெப்பத் தீவு விளைவு காரணமாக நிலைமை மேலும் கடுமையாகலாம்.
எனவே வானிலை முன்னறிவிப்புகளை தொடர்ந்து கவனித்தல், அதிக வெப்ப நேரங்களில் தேவையற்ற வெளிப்பயணங்களை தவிர்த்தல், போதுமான தண்ணீர் குடித்தல் போன்ற தனிநபர் பாதுகாப்பு நடவடிக்கைகளும் அவசியம்.
எனினும், 2027-ம் ஆண்டுதான் உலக வரலாற்றிலேயே மிக வெப்பமான ஆண்டு என்று இப்போதே உறுதியாகக் கூற முடியாது. எல் நினோ வெப்பநிலையை மேலும் உயர்த்தக்கூடிய ஒரு காரணியாக இருந்தாலும், மனிதர்களால் வெளியிடப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் நீண்டகால உலக வெப்பமயமாதலின் முக்கிய காரணமாக உள்ளன.
இந்த மாற்றங்களின் தாக்கம் வெப்பநிலையில் மட்டும் வெளிப்படுத்தவில்லை.. கடல் நீர் அதிகமாக வெப்பமடைவதால் பவளப் பாறைகள், மீன்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களின் வாழ்வியல் பாதிக்கப்படலாம்.. மழைப்பொழிவில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் விவசாயிகளுக்கு சவாலாக அமையலாம்.. பயிர் வளர்ச்சிக்குத் தேவையான நீர் கிடைக்காத பகுதிகளில் வறட்சி தீவிரமடையலாம்..
அதே நேரத்தில் அதிக மழை பெய்யும் இடங்களில் பயிர்கள் சேதமடையும் அபாயமும் உள்ளது.. நகரங்களில் அதிகரிக்கும் வெப்பம் மின்சாரத் தேவையை உயர்த்தக் கூடும்.. குறிப்பாக குளிர் சாதன சாதனங்களின் பயன்பாடு அதிகரிப்பதால் மின் கட்டமைப்பின் மீது அழுத்தம் ஏற்படலாம்..
எனவே அரசுகள் மட்டும் அன்றி பொது மக்களும் உள்ளூர் அளவில் வெப்பத்தை எதிர்கொள்ளும் திட்டங்களை உருவாக்கி, இயற்கை வளங்களை சிக்கனமாக பயன்படுத்தி, அவசரநிலை தகவல்களைக் கவனித்து செயல்படுவது அவசியமாகிறது..
பள்ளிகள், அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களிலும் வெப்பதிலிருந்து பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே செய்யப்பட்ட வேண்டும்.. மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதும், நீர் நிலைகளை பாதுகாப்பதும் நீண்ட காலத்தில் வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க உதவும் இதுவும் அனைவரின் பொறுப்பாகும்..
எல் நினோ எச்சரிக்கை இயற்கையின் மாற்றங்களை மட்டும் சுட்டிக்காட்டவில்லை; காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உலக நாடுகள் இன்னும் வேகமாக செயல்பட வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறது. வெப்பத்தை குறைப்பது, நீரை சேமிப்பது, மரங்களை பாதுகாப்பது, புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகள் எதிர்கால தலைமுறைக்கு பாதுகாப்பான பூமியை உருவாக்க உதவும்.
எல்நினோவின் தாக்கத்தை முன்கூட்டியே கணித்து விவசாயம், குடிநீர் மேலாண்மை, சுகாதாரம் போன்ற துறைகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது பாதிப்புகளைக் குறைக்க உதவும்!!!