

தமிழ்நாட்டில் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் 25 புதிய இயற்கை பூங்காக்கள் அமைக்கப்படும் என வனத்துறை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித் குமார் சட்டப்பேரவையில் இன்று (செப்.7) அறிவித்துள்ளார். கிராமப்புற, நகர்ப்புற மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அரசு, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற அரசு நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்களில் தலா ஒரு ஹெக்டேர் பரப்பளவில் இந்த அமைதியான இயற்கைப் பூங்காக்கள் உருவாக்கப்பட உள்ளன. மாநிலத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கவும், பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு பயனுள்ள வகையில் இயற்கைச் சூழலை உருவாக்கவும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வனத்துறை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித் குமார் தமிழகத்தின் பல்வேறு முக்கிய பகுதிகளில் முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் 25 புதிய இயற்கைப் பூங்காக்கள் (Nature Parks) உருவாக்கப்படும். இவை பொதுமக்களுக்கு இயற்கை சார்ந்த பொழுதுபோக்கு இடங்களை உருவாக்கவும், சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாக்கவும், நகர்ப்புறங்களில் பசுமைப் பரப்பை அதிகரிக்கவும் இந்த இயற்கை பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளதாகக் கூறியுள்ளார்.
முன்னதாக தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தமிழகம் முழுவதும் 250 புதிய பூங்காக்கள் ரூபாய் 175 கோடியில் அமைக்கப்படும் என்றும், திருச்சி, திருப்பூர், புதுக்கோட்டையில் ரூபாய் 130 கோடியில் பெரிய பூங்காக்கள் அமைக்கப்படும்; பசுமை திட்டங்களை செயல்படுத்தும் வகையில் மக்கள் இயக்கமாக ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்படும் என்றும் சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அதன் ஒரு பகுதியாக வனத்துறையின் சார்பில் இந்த 25 இயற்கைப் பூங்காக்கள் அமைப்பதற்கான அறிவிப்பை அமைச்சர் ரஞ்சித் குமார் வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு இயற்கை சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், இயற்கையோடு நேரத்தை கழிக்க தகுந்த சூழலை உருவாக்கவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே காடுகள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நகர்ப்புற/வனப்பகுதிகளின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதும் தான் இதன் முக்கிய நோக்கமாக உள்ளது. வனத்துறையை மேம்படுத்தவும், பசுமைப் பரப்பை அதிகரிக்கவும் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கிராமப்புற, நகர்ப்புற மற்றும் நகரை ஒட்டிய புறநகர்ப் பகுதிகளில், அரசு, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்களில் தலா ஒரு ஹெக்டேர் பரப்பளவில் 25 இயற்கைப் பூங்காக்கள் உருவாக்கப்படும். இத்திட்டத்திற்காக ரூபாய் 10 கோடி செலவிடப்படும் என்று வனத்துறை அமைச்சர் கூறியுள்ளார். அத்துடன் நடமாடும் வனவிலங்கு ஆய்வகம் ஒன்று ரூபாய் ஒரு கோடி செலவில் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
வனவிலங்குகளுக்கு ஏற்படும் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து நோய் பரவலைத் தடுக்க, வனவிலங்குகளைப் பாதுகாக்க, வனவிலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்களை (Zoonotic Diseases) தடுக்க, நடமாடும் வனவிலங்கு தடயவியல் மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகம் (Mobile Wildlife Forensic and Disease Diagnostic Laboratory) ரூபாய் ஒரு கோடி செலவில் தென் தமிழ்நாட்டில் தயார் நிலையில் வைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் வனவிலங்குகளுக்கு களத்திலேயே விரைவான மருத்துவ சிகிச்சை அளிக்கவும், வனக்குற்றங்களை விசாரிக்கவும் தொடங்கப்படவுள்ள ஒரு அதிநவீன வசதி ஆகும்.இது வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் அவற்றின் சுகாதார மேலாண்மையில் தமிழ்நாடு வனத்துறை எடுத்துள்ள மிக முக்கிய மற்றும் முன்னோடியான உத்தியாக பார்க்கப்படுகிறது.