

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற மே 4-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதன்படி பெரும்பான்மை பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தார்.
இதில் தமிழ்நாட்டின் திராவிட கட்சிகளான திமுக 59 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும் வென்றிருந்தன. இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் மூன்று பேர் இன்று ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர்.
அதிமுக எம்எல்ஏக்களின் இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் சட்டமன்றத்தில் அதிமுகவின் பலமும் 44 ஆக குறைந்துள்ளது. ஏற்கனவே இபிஎஸ் மற்றும் எஸ்பி.வேலுமணி தலைமையில் 2 அணிகளாக பிரிந்துள்ள அதிமுகவில், தற்போது மூன்று எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து விட்டு, தவெக-வில் இணைந்திருப்பது அதிமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் தொகுதி எம்எல்ஏ சத்தியபாமா ஆகிய மூவரும் இன்று தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜேசிடி.பிரபாகரனை சந்தித்து வழங்கினர். ராஜினாமா செய்த கையோடு விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நேரில் சந்தித்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
தவெக-வில் இணைந்த மூன்று முன்னாள் எம்எல்ஏக்களை பொன்னாடை போர்த்தி வரவேற்றார் அமைச்சர். ஏற்கனவே திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வர் விஜய் ராஜினாமா செய்த நிலையில், தற்போது மூன்று தொகுதிகளில் அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
இதன் காரணமாக தற்போது தமிழ்நாட்டின் 4 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. இதற்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இடைத்தேர்தலில் தவெக சார்பில் தற்போது ராஜினாமா செய்த மூன்று எம்எல்ஏக்களையும் வேட்பாளர்களாக அறிவிப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான், அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஏற்கனவே அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு இடம் அளிக்கப்படும் என்ற நம்பிக்கையில் எஸ்.பி.வேலுமணி மற்றும் சிவி.சண்முகம் தலைமையிலான எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளித்தனர்.
அமைச்சரவையில் அவர்களுக்கு இடம் கிடைக்காத சூழலில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக சார்பில் போட்டியிட்டால் மட்டுமே அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில் தற்போது மூன்று எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து விட்டு தவெக-வில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தை பரபரப்பாகியுள்ளது.