

மேற்காசியாவில் நிலவி வரும் போர் காரணமாக ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக வரவேண்டிய கச்சா எண்ணெய் கப்பல்கள் அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளன. அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் 2 வாரங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஆனால் ஹார்மூஸ் வழியாக ஈரான் செல்லும் கப்பல்களை முற்றுகையிடும் பணி மட்டும் தொடரும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹார்மூஸ் ஜலசந்தியை பாதுகாக்க அமெரிக்கா எடுத்து வரும் நடவடிக்கைகள் பலன் தராத நிலையில், தற்போது 30 நாடுகள் ஒன்றாக களத்தில் இறங்கியுள்ளன.
ஹார்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை பாதுகாப்பாக மேற்கொள்ள, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் தலைமையில் சுமார் 30 நாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
கடந்த வாரம் இதற்கான விருப்பம் குறித்து உலக நாடுகளிடையே கேட்கப்பட்டது. ஹார்மூஸ் ஜலசந்தியை பாதுகாக்க 30 நாடுகள் விருப்பம் தெரிவித்த நிலையில், லண்டனில் அந்நாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சர்வதேச கடல்சார் பாதுகாப்பு திட்டத்தை விரிவுபடுத்தவும், முறையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், தற்போது 30 நாடுகள் ஹார்மூஸ் ஜலசந்தியை பாதுகாக்க களத்தில் இறங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் போர் நிறுத்தத்தை அமெரிக்கா நீட்டித்துள்ள நிலையில், இதற்கு எவ்வித கருத்தும் ஈரான் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை என்பது உலக நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.