

பயணிகள் ரயில் சேவையில் நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது தெற்கு இரயில்வே. கடந்த 2025–26 நிதியாண்டில், பயணிகள் ரயில் சேவையில் அதிக வருவாய் ஈட்டிய மண்டலமாகத் தெற்கு இரயில்வே சாதனை படைத்துள்ளது.
இந்திய இரயில்வேயில் உள்ள 18 மண்டலங்களில், தற்போது தெற்கு ரயில்வேயின் இந்த சாதனை ரயில்வே ஊழியர்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.
கடந்த ஆண்டை விட ரூ.735.78 கோடி கூடுதலாக, மொத்தம் ரூ.8,271 கோடி வருவாய் ஈட்டியுள்ளது தெற்கு ரயில்வே. இந்தியன் ரயில்வே வரலாற்றில் ஒரு நிதியாண்டில் ஒரு மண்டலம் ஈட்டிய அதிகபட்ச வருவாய் இதுதான்.
கோடிக்கணக்கான பயணிகளின் நம்பிக்கை மற்றும் தெற்கு இரயில்வே ஊழியர்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் இது. இந்த சாதனை வெற்றியை கொண்டாடும் விதமாக தெற்கு ரயில்வே எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவிட்டுள்ளது.
பயணிகளுக்கு தரமான ரயில் சேவையை தொடர்ந்து வழங்குவதன் மூலம் நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது தெற்கு ரயில்வே. இனி வரும் ஆண்டுகளில் தெற்கு ரயில்வேயின் வருவாய் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.