ரேஷன் கார்டுக்கு தலா ₹3,000.! பொங்கலுக்கு மாஸாக பிளான் போடும் திமுக.!

Pongal Gift
Pongal Gift
Updated on

தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், பொங்கல் பண்டிகைக்கு ரூ.3,000 ரொக்கப் பணம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதோடு பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவையும் வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் பொங்கல் பரிசாக தமிழக மக்களுக்கு ரொக்கப் பணமும், பரிசுத் தொகுப்பும் வழங்குவது வழக்கம். அவ்வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் அதிகபட்சமாக பொங்கலுக்கு ரூ.2500 வழங்கப்பட்டது. அதன் பிறகு ஆட்சி பொறுப்பேற்ற திமுக பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்கியது. இருப்பினும் நடப்பாண்டு பொங்கல் பண்டிகைக்கு ரொக்கப் பணம் ஏதும் இன்றி பரிசுத் தொகுப்பை மட்டுமே தமிழக அரசு வழங்கியது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரவிருப்பதால், மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க திமுக தலைமையிலான தமிழக அரசு, பொங்கல் பரிசாக ஒரு ரேஷன் கார்டுக்கு தலா 3,000 ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே பொங்கல் பரிசாக பொதுமக்களுக்கு தமிழக அரசு ரூ.5,000 வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 இடங்களைப் பிடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் பொதுமக்களை கவரும் விதமாக 2.25 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.3,000 வழங்க முடிவு செய்துள்ளது.

இருப்பினும் முன்னதாக பொங்கலுக்கு ரூ.5,000 ரொக்கப் பணம் கொடுக்க வேண்டும் என கூட்டுறவு மற்றும் நிதித்துறை அதிகாரிகளிடம் திமுக மூத்த அமைச்சர்கள் வலியுறுத்தினர். ஆனால் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அமலில் இருப்பதால், 5,000 ரூபாய் கொடுத்தால் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படும் என நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு எவ்வளவு ரொக்கப் பணம் கொடுக்கலாம் என்பது குறித்து, சென்னை தலைமை செயலகத்தில் உயரதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் ஒரு ரேஷன் கார்டுக்கு அதிகபட்சமாக எவ்வளவு பணம் கொடுக்கலாம்; இதனால் ஏற்படும் நிதி இழப்பை எப்படி சீர்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இருப்பினும் இதுவரை வழங்காத அளவிற்கு அதிகபட்ச தொகையை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. பலகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு தற்போது ரூ.3,000 ரொக்கப் பணத்துடன், பரிசுத் தொகுப்பை வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதையும் படியுங்கள்:
பொங்கலுக்கு மண்பானை கிடைக்குமா..? - அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!
Pongal Gift

அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு ரொக்கப்பணம் வழங்க இருப்பதால், பொங்கல் பரிசுத் தொகுப்பை பண்டிகை முடிந்த பிறகும் கூட வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஜனவரி மாதம் முழுக்கவும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொடர்பான அறிக்கை வெகு விரைவில் அறிவிக்கப்படும் என கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் தற்போது புதிய ரேஷன் கார்டுக்கான விண்ணப்பங்கள் 1 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில், இதில் 55,000 ரேஷன் அட்டைகளை விரைவில் வழங்கவிருப்பதாக கூட்டுறவுத் துறை சமீபத்தில் தெரிவித்தது.

பொங்கல் பண்டிகைக்கு முன்பாக ரேஷன் கார்டை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், புதிய ரேஷன் கார்டு விநியோகப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பொங்கலுக்கு முன்பு புதிய ரேஷன் கார்டுகளை விநியோகம் செய்தால், கூடதலாக 55,000 பேருக்கும் பொங்கல் பரிசு கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து உள்ளீர்களா..? குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு.!
Pongal Gift
logo
Kalki Online
kalkionline.com