

இந்தியாவில் தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தொகுதி மறுவரையறை பணிகளைத் தீவிரப்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகு, இந்தியாவில் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகள் 816 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 33 சதவீதமாக உயர்த்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது. இதன் மூலம் 816 தொகுதிகள் உயர்த்தப்பட்ட பிறகு, அதில் 273 தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி வருகின்ற 2029 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்தே பெண்களுக்கான 33 சதவீத ஒதுக்கீட்டை அமலுக்கு கொண்டுவர மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
பொதுவாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்த பிறகு, தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டியது அவசியம். 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி நாட்டில் 543 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன.
தற்போது நடைபெற்று வரும் சென்சஸ் பணிகள் முடிவடைந்த பிறகு, மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த எண்ணிக்கை 816 ஆக உயர்த்தப்பட உள்ளது.
இந்நிலையில் தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை அறிமுகம் செய்ய, வருகின்ற ஏப்ரல் 16-ல் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு கூட்டத்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது