

தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், இன்று மாலை வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியாக இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் எங்கேயுமே இல்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சற்றுமுன் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் மட்டுமே காங்கிரஸ் இருப்பதாகவும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் கூறுகையில், “தற்போதைய ஆட்சியில் தமிழ்நாட்டில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; கொங்கு பகுதிகளில் தோட்டத்தில் யாரும் வசிக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் காங்கிரஸ் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. ஆனால் கூட்டணியில் மட்டும் சீட் கொடுத்து வைத்திருக்கிறார்கள்.
நேற்று ஆலங்குளத்தில் பனை விவசாயியை போலீசார் துப்பாக்கியால் சுட்டது, தற்போதைய ஆட்சியின் அவலமான நிலையை எடுத்துக் காட்டுகிறது. இந்த சம்பவம் உண்மையில் வருந்தத்தக்கது மற்றும் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
அரசாங்கம் ஒரு கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்கிறது. அரசை ஒரு கட்டுக்குள் கொண்டுவர தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி அவசியம்” என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.