

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் உடல் பருமன் என்பது தற்போது பரவலாக காணப்படும் ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இது உட்கார்ந்த வாழ்க்கை முறை, உடல் உழைப்பு அற்ற வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால் அதிகரித்துக்கொண்டே வருகிறது என்றே சொல்லலாம். அதாவது, நவீன யுகத்தில் மக்களின் வாழ்க்கை முறை கடுமையாக மாறியுள்ளது.
இந்தியாவில் ஐடி போன்றவற்றில் வேலை செய்பவர்கள் வீட்டிலும், அலுவலகத்திலும் வேலை நிமித்தமாக காலை முதல் இரவு வரை அதிகநேரம் உட்கார்ந்தே வேலை செய்யும் நிலையில் உள்ளனர். இவர்கள் அப்படி உட்கார்ந்தே வேலை செய்யும் போது உணவு சாப்பிடுவதை விட இடையிடையே சிப்ஸ், சமோசா, பீட்சா, இனிப்பு, கேக் போன்ற ஸ்நாக்ஸ் அயிட்டங்களை அதிகளவும் சாப்பிடுகின்றனர்.
அதிக நேரம் உட்கார்ந்திருக்கும் வாழ்க்கை முறை (sedentary lifestyle) கலோரிகளை எரிப்பதைத் தடுக்கிறது, இதனால் உடலில் கொழுப்பு சேருகிறது. அதேபோல் ஆரோக்கியமற்ற, அதிக கலோரி கொண்ட உணவுகளை உட்கொள்வது உடல் உழைப்பு இல்லாத நிலையில் மேலும் உடல் பருமனை அதிகரிக்கும்.
ஆனால் அதற்கு ஏற்ற வகையில் உடற்பயிற்சியோ, உடல் உழைப்போ அவர்கள் செய்வதில்லை. உடல் உழைப்பு இல்லாததால் ஏற்படும் உடல்பருமனுக்கு முக்கியக் காரணம், நாம் உட்கொள்ளும் கலோரிகளைவிடக் குறைவாக எரிப்பதுதான். உடற்பயிற்சி மற்றும் அன்றாடச் செயல்பாடுகள் இல்லாதபோது, உடல் ஆற்றலைச் சேமித்து வைப்பதால் கொழுப்பு அதிகமாகச் சேர்ந்து உடல் பருமன் ஏற்படுகிறது. இதனால் 25 வயதிலேயே ஹார்ட் அட்டாக், நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் போன்ற உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர்.
உடல் உழைப்பு இல்லாமல் அதிகநேரம் உட்கார்ந்தே இருப்பவர்கள் இதுபோன்ற ஸ்நாக்ஸ் உணவுகளை அதிகமாக சாப்பிடுவது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் குறைந்தபட்சம் நடைப்பயிற்சியாவது செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
சுவைக்கு அடிமையாகி வாயை கட்ட முடியாமல் ஆசையால் ஈர்க்கப்பட்டு சிப்ஸ், சமோசா, பீட்சா போன்ற குப்பை உணவுகளை சாப்பிடுவதால் நம் உடலில் ஏறும் கலோரியை எரிக்க தினமும் எவ்வளவு நேரம் நடைபயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பது குறித்து மும்பையைச் சேர்ந்த எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மனன் வோரா பதிவிட்டுள்ள போஸ்ட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளீர்களா? தொடர்ந்து படியுங்கள்!
வீட்டில் குடும்பத்துடன் இருக்கும் போதும், அலுவலத்தில் வேலை செய்தாலும் நாம் விரும்பும் போதெல்லாம் இந்த குப்பை உணவுகளை வீட்டில் செய்தோ அல்லது ஹோட்டலில் ஆர்டர் செய்தோ சாப்பிடுகிறோம். சுண்டி இழுக்கும் சுவையால் இந்த உணவுகளை நாம் 15 நிமிடங்களில் சாப்பிட்டு விடுகிறோம். ஆனால் இந்த குப்பை உணவுகளிலிருந்து நாம் பெறும் கலோரிகளை எரிக்க, அவற்றை சாப்பிடும் நேரத்தை விட அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கும் என்று யார் நினைத்திருப்பார்கள்? ஆனால் அதுதான் உண்மை.
இதுகுறித்து டாக்டர் மனன் வோரா, நமக்குப் பிடித்த சில உணவுகளிலிருந்து கலோரிகளை எரிக்க நாம் எவ்வளவு நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்
ஒரு சமோசா அல்லது வடா பாவ்வில் (vada pav) 250 கலோரிகள் உள்ளது. இந்த 250 கலோரியை எரிக்க 50 நிமிட நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
முழு பீட்சா இல்லீங்க, ஒரு துண்டு பீட்சாவில் 285 கலோரிகளும், ஒரு பாக்கெட் சிப்ஸ்சில் 330 கலோரிகள் உள்ளது என்றும் அதை எரிக்க 1 மணிநேர நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்றும் டாக்டர் மனன் வோரா கூறியுள்ளார்.
ஒரு துண்டு குலாப் ஜாமூனில் 180 கலோரிகள் உள்ளது என்றும் அதை எரிக்க 35 நிமிட நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்றும் ஒரு தட்டு சோல் பதுரேவில்(chole bhature) 600 கலோரிகள் உள்ளது என்றும் அதனை எரிக்க சுமார் 2 மணிநேர நடைப்பயிற்சி நடக்க வேண்டும் என்றும் கூறி அனைவரையும் அதிர்ச்சியடைச்செய்துள்ளார்.
நமக்குப் பிடித்த உணவை சாப்பிடுவதை நாம் உண்மையில் கைவிடத் தேவையில்லை என்று கூறியுள்ள டாக்டர் மனன் வோரா, இதுபோன்ற உணவுகளை அவ்வப்போது அளவாகச் சாப்பிடுங்கள். ஆனால் அதேநேரம் அதனை எரிக்க உடற்பயிற்சியையும் செய்ய தவறாதீர்கள். அதுவே ஆரோக்கியமாக இருக்க ஒரு வழி என்று கூறி தனது பதிவை முடித்தார்.
அவரது பதிவு, சிந்தனையின்றி குப்பை உணவை சாப்பிடுவதற்குப் பதிலாக, நடைபயிற்சி மூலம் அதை சமநிலைப்படுத்த முடியும் என்பதை தெளிவாக விளக்கியது.