

இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப புற்றுநோய் சிகிச்சையை நவீனப்படுத்தும் முறையில், இந்திய மருத்துவ கவுன்சில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல மணி நேரம் நடக்கும் புற்றுநோய் சிகிச்சையை வெறும் ஏழு நிமிடங்களாக குறைத்து சாதனை படைத்துள்ளது இந்தியா.
பொதுவாக புற்றுநோய் சிகிச்சைக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகளை குளுக்கோஸ் மூலம், நரம்பு வழியாகவே செலுத்தப்படும். இந்த மருந்தை செலுத்த கிட்டத்தட்ட 2 முதல் 3 மணி நேரம் வரை ஆகலாம். ஆனால் தற்போது புற்றுநோய் சிகிச்சைக்கான ஆண்டிபயாட்டிக் ஊசியை தொடையில் உள்ள சதை வழியாக வெறும் ஏழே நிமிடங்களில் செலுத்த முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நுரையீரல் புற்றுநோயாளிகளுக்கு இந்த சிகிச்சை நல்ல பலனை தருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல மருந்து நிறுவனமான ரோச் ஃபார்மா (Roche Pharma), 'டெசென்ட்ரிக்' (Tecentriq) என்ற பெயரில் 'அடெசோலிசுமாப்' (Atezolizumab) எனும் புற்றுநோய்த் தடுப்பாற்றல் சிகிச்சை மருந்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த சிகிச்சை ஒரு இம்யூனோதெரபி சிகிச்சை ஆகும். கீமோதெரபி போன்றே உடலில் உள்ள நல்ல செல்களை பாதுகாக்கும்.
நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டி, புற்றுநோய் செல்களை அழிக்க இந்த மருந்து உதவும். இந்த ஊசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஊசியின் மூலம் சிகிச்சை நேரம் 80% அளவிற்கு குறையும் என்பதால், மருத்துவமனையில் நீண்ட நேரம் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.
ஒரு டோஸ் ஊசியின் விலை ரூ.3.7 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நோயாளிக்கு நோயின் அளவைப் பொறுத்து 3 முதல் 6 டோஸ்கள் வரை செலுத்தப்படும். இதன் விலை அதிகமாக இருப்பதால் சாமானிய மக்களுக்கு எளிதில் கிடைக்குமா என்ற சந்தேகமும் எழுகிறது.
இருப்பினும் Central Government Health Scheme (CGHS) திட்டத்தின் கீழ் இந்த ஊசி சேர்க்கப்பட்டுள்ளதால், சாமானிய மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், தயாரிப்பு நிறுவனம் 'ப்ளூ ட்ரீ' என்ற நோயாளி உதவித் திட்டம் மற்றும் மாதத் தவணை வசதிகளையும் வழங்குகிறது
பொதுவாக நரம்புகளில் போடப்படும் ஊசியின் மூலம் நோயாளிகளுக்கு வ்திக வலியை தரக்கூடியதாகவும், அசவுரியமாகவும் இருக்கும். ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஊசி சதை வழியாகவே செலுத்தப்படும் என்பதால், நோயாளிகளுக்கு குறைவான வலியே இருக்கும்.