திபெத்தில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதில் சுமார் 9 பேர் பலியாகியுள்ளனர்.
காலநிலை மாற்றத்தால் ஆங்காங்கே கடுமையான புயல், வெயில், நிலநடுக்கம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக உலகம் முழுவதும் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை அச்சுறுத்துகிறது. அந்தவகையில், நேப்பாள எல்லையில் அமைந்துள்ள டிங்ரி பகுதியில் காலை 9.05 மணிக்கு 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாகச் சீன நிலநடுக்கக் கட்டமைப்பு நிலையம் (CENC) கூறியது. இருப்பினும் அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம், அந்த நிலநடுக்கம் 7.1 ரிக்டர் அளவு கொண்டது எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையங்கொண்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது. டிங்ரியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மிக வலுவான, நிலநடுக்கத்துக்குப் பிந்திய அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் நில நடுக்கம் மையங்கொண்டிருந்த இடத்திற்கு அருகே பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகவும் சீன அரசாங்கத் தொலைக்காட்சி கூறியது.
உள்ளூர் அதிகாரிகள் அங்கு எவ்வளவு சேதம் ஏற்பட்டிருக்கிறது என்பதை ஆராய்ந்து வருகின்றனர். ஏற்கனவே 9 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கம் ஏற்பட்ட அந்த பகுதியில் கிட்டத்தட்ட 62 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருவதாகவும், எவரஸ்ட் சிகரத்தின் சீனப் பக்கமாக அமைந்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.
அந்தப் பகுதியின் 200 கிலோமீட்டர் பதிவான வலுவான நிலநடுக்கம் இது என்று ‘சிஇஎன்சி’ கூறியது.
இந்த நிலநடுக்கத்தால் ஏறக்குறைய 400 கிமீ தொலைவில் உள்ள நேபாளம் வரை அதிர்வுக் காணப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் நேப்பாள எல்லையில் உள்ள இந்தியாவின் பீகார் மாநிலத்திலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சீனாவின் தென்மேற்குப் பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். 2008ம் ஆண்டு அங்குள்ள சிசுவான் வட்டாரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏறக்குறைய 70,000 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து இப்போது ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று என்பதால், அதிகளவு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.