

தமிழகத்தில் தேர்தலுககு இன்னும் 7 நாட்களே உள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23-ம்தேதி ஓரே கட்டமாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், தவெக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் தனித்தனியாகவும் போட்டியிடுகின்றன. அந்த வகையில் இந்த சட்டமன்ற தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது.
முதல்முறையாக தேர்தல் களத்தில் நுழைந்துள்ள விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் (TVK) வருகை மற்றும் திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு இடையிலான கடுமையான போட்டி, தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் தமிழகம் முழுவதும் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே அரசியல் களம் அனல் பறக்கும் பிரசாரத்தில் சூடிபிடித்துள்ள நிலையில், மற்றுமொரு பரபரப்பான செய்தியாக தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும் என்று பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது ராமேசுவரம் கோவிலில் வாசிக்கப்பட்ட பஞ்சாங்கத்தில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு சித்திரை மாதம் முதல் நாள் அன்று பாரம்பரியமாக பஞ்சாங்கம் வாசிக்கும் வழக்கம் தொன்றுதொட்டு நடந்துவருகிறது..
அதன்படி கோவிலின் குருக்கள் வருகிற ஓராண்டில் நாட்டில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் குறித்து பஞ்சாங்கத்தில் இடம் பெற்று இருந்து தகவல்களை வாசித்தார். அதில்..
பல கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை களத்தை சந்திக்க நேரும் என்றும் எதிர்க்கட்சிகளுக்கு ராஜயோகம் அமையும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும். மேலும் ஆளுங்கட்சி மூத்த தலைவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு அதிகரிக்கும். இதனால் பல சரிவுகளை சந்திக்க வேண்டி வரும். அரசியல் கட்சி தலைவர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆந்திரா, ஜார்கண்ட், ஒடிசா, பீகார் போன்ற மாநிலங்கள் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்படும். தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களின் விற்பனை நிலையில்லாத வியாபாரமாக அமையும்.
இந்தாண்டில் தொற்றுக்கிருமி வைரஸ் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளது. பல திட்டங்களை மத்திய - மாநில அரசுகள் நிறைவேற்ற இயலாது. எல்லையோரத்தில் வெடிகுண்டு தாக்குதல் அடிக்கடி நடக்க வாய்ப்புகள் உள்ளது.
அதேபோல் வெளிநாட்டில் சிறுபான்மையினர் அதிகமாக பாதிக்கப்படுவர். பொதுப்பணித்துறைக்கு மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை விதிக்க நேரும். அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும். பொது மக்களிடயே பணப்புழக்கம் இருக்காது. பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்காது. ஆளுங்கட்சியில் உட்கட்சி பூசல் ஏற்படும். பள்ளிகளில் மாணவிகளுக்கு பாதுகாப்பு இருக்காது. பாலியல் தொல்லை அதிகரிக்கும்.
மத்தியில் தமிழ்நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் முக்கிய பதவி வகிக்க நேரும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் மணப்பாறை அருகே உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான மான்பூண்டி நல்லாண்டவர் கோவிலில் வாசிக்கப்பட்ட பஞ்சாங்கத்தில், இந்த ஆண்டில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என்றும் பல அதிரடி மாற்றங்கள் இருக்கும். அரசியலில் புதிய மாற்றங்கள் ஏற்படும். மாநில அரசுகளுக்குள் அடிக்கடி உட்கட்சி பூசல்களும், சிக்கல்களும், குழப்பங்களும் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது
மத்தியில் நிலையான நேர்மையான ஆட்சி நடைபெறும். மத்திய, மாநில அரசுகளில் பல முக்கிய சங்கடங்கள் ஏற்படும். பல தலைவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பல முக்கிய அரசியல்வாதிகளின் பதவிகளுக்கு பாதிப்பும், உடல் மற்றும் மனச்சோர்வும் ஏற்படும் என பல்வேறு விஷயங்கள் கணிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட இன்னும் பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் இடம் பெற்றுள்ள நிலையில் அரசியல் குறித்த இந்த கணிப்புகள் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏனெனில் திமுக, அதிமுகவிற்கு போட்டியாக விஜய்யின் அதிரடியான வரவு பல அரசியல் கட்சிகளுக்கு வயிற்றில் புளியை கரைத்துள்ள நிலையில், தற்போது பஞ்சாங்கத்தின் கணிப்பு மேலும் பீதியை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்லலாம்.
பொறுத்திருந்து பார்க்கலாம்... இந்தக் கணிப்புகள் நிஜமாகுமா என்பது வரும் மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகளின் போது தெரிந்துவிடும்.