

நடப்பாண்டு நடந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும், மருத்துவ கல்வி கட்டணத்தை காலக்கெடுவிற்குள் செலுத்த முடியாத காரணத்தால் மூன்று தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் கல்வி கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை தவறவிட்ட மூன்று மாணவர்களுக்கும், மறு வாய்ப்பை வழங்க வேண்டும் என அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் ஏ.எஸ். சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, மாணவர்கள் வருகின்ற டிசம்பர் 10-ம் தேதிக்குள் கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டும் என தெரிவித்தது.
மருத்துவக் கல்வி கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி இரண்டாவது சனிக்கிழமை வங்கி விடுமுறை என்பதால் கட்டணத்தை செலுத்த முடியவில்லை எனவும், எங்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
முதலில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், கல்வி கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் வங்கி விடுமுறை என்பதை அறிந்து, ஆலோசனை செய்தது. பிறகு நிதி சிக்கல்கள் காரணமாக மாணவர்களுக்கு மறு வாய்ப்பை வழங்க முடிவு செய்தது உச்ச நீதிமன்றம். மேலும் இந்த உத்தரவு, எதிர்காலத்தில் முன்னுதாரணமாக கருதப்படாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
கட்டணம் செலுத்தாத மூன்று மாணவர்களில் விக்ஷ் என்ற மாணவர் காலக்கெடுவான கடைசி நாள் வங்கி விடுமுறை என்பதால் தான் கட்டணத்தை செலுத்த முடியவில்லை என உச்ச நீதிமன்றத்தில் தனது வாதத்தை முன் வைத்தார்.
மற்ற இரண்டு மாணவர்களும் நிதி நெருக்கடி காரணமாக கல்வி கட்டணத்தை செலுத்த கூடுதல் அவகாசம் தேவைப்பட்ட நிலையில், ஷில்பா சுரேஷ் என்பவர் தனக்கு உதவும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒற்றை அமர்வு, ஷில்பா சுரேஷ் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்திருப்பதைக் குறிப்பிட்டு, அவருக்கு மறு வாய்ப்பை அளித்தது.
இருப்பினும் அடுத்த நாளே உயர்நீதி மன்றத்தின் டிவிஷன் அமர்வு, இந்த உத்தரவை ரத்து செய்தது. மேலும் இதேபோல் பல மாணவர்கள் காலக் கெடுவிற்குள் கல்வி கட்டணத்தை செலுத்தாமல் இருக்கலாம். இதற்கெல்லாம் மாணவர்கள் சோர்ந்து விட வேண்டாம் எனவும், மற்றொரு துறையைத் தேர்ந்தெடுத்து படிக்கும் படியும் அறிவுறுத்தினர்.
நடப்பாண்டு நீட் தேர்வில் 251 மதிப்பெண்கள் பெற்ற ஷில்பாவுக்கு, கடந்த நவம்பர் மூன்றாம் தேதி மாதா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் நவம்பர் 8 ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மருத்துவ கல்லூரியில் இவர் கல்விக் கட்டணத்தை செலுத்தி அறிக்கை செய்ய வேண்டும்.
ஆனால் நவம்பர் 8 ஆம் தேதி தான் தன்னால் கல்விக் கட்டணத்தை ஏற்பாடு செய்ய முடிந்தது எனவும், அன்றைய தினம் வங்கி விடுமுறை என்பதால் குறித்த காலக்கெடுவிற்குள் கட்டணத்தை செலுத்த முடியவில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து மாணவி ஷில்பா கல்லூரியைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்த நிலையில், கல்லூரி சார்பில் எந்த பதிலும் வரவில்லை எனத் தெரிவித்தார். இதனால் அவருடைய இடம் நிரப்பப்படவில்லை எனக் கருதி, காலியிடத்தில் சேர்க்கப்பட்டது.
இந்நிலையில் சில்பா மற்றும் விக்ஷ் உள்பட மூன்று மாணவர்களும் உச்சநீதிமன்றத்தை நாடிய நிலையில், மாணவர்களுக்கு மறு வாய்ப்பை வழங்கி உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். மேலும் வருகின்ற டிசம்பர் 10ஆம் தேதிக்குள் கல்வி கட்டணத்தை செலுத்தி, தங்கள் இடத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.