
மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பை நடத்துகிறது. அதன்படி, இப்போது இந்த திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையில் சேருவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்காக சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை வீரர்கள் தேர்வு மையத்தில் திறந்தவெளி ஆட்சேர்க்கை தேர்வு நடைபெற உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொள்லாம். இளம் வயதில் விமானப்படையில் பணியாற்றக்கூடிய வாய்ப்பு என்பது அரிய வாய்ப்பாகும். இந்திய ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என விருப்பம் உள்ளவர்கள், அதுவும் விமான படையில் சேர வேண்டும் என ஆர்வம் உள்ளவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம். ஆனால் இதற்கு ஓரே ஒரு நிபந்தனை மட்டும் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது திருமணம் ஆகாதவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருமணம் ஆகாத இளைஞர்கள் ‘அக்னிவீர்வாயு’ திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான ஆட்சேர்க்கை தேர்வு சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை வீரர்கள் தேர்வு மையத்தில் நடைபெற உள்ளது.
இதில் வருகிற 27 மற்றும் 28-ந்தேதிகளில், தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த ஆண் விண்ணப்பதாரர்களுக்கும், கேரளா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த ஆண் விண்ணப்பதாரர்களுக்கு வருகிற 30 மற்றும் 31-ந்தேதிகளில் இந்த தேர்வுகள் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, ஏனாம், அந்தமான்-நிகோபார் மற்றும் லட்சத்தீவுகள் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆண்களுக்கு செப்டம்பர் மாதம் 2-ந்தேதி தொடங்கி 3-ந்தேதி வரை 2 நாட்கள் நடைபெற உள்ளது. அதேபோல் செப்டம்பர் 5 மற்றும் 6-ந்தேதிகளில் அனைத்து மாநிலங்களை சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்களுக்கு தகுதித்தேர்வுகள் நடைபெற உள்ளது.
இதில் விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் ஆட்சேர்ப்புத் தேர்வுகள் நடைபெறும் தேதிகளில் அந்தந்த இடத்திற்கு நேரில் சென்று அந்த இடத்திலேயே விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்குமான தேர்வுகள் சென்னை, தாம்பரம், விமானப்படை நிலையத்தில் உள்ள, ஏர்மேன் தேர்வு மையத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2005-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் 2008-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதிக்குள் பிறந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்த தேர்வில் பங்கேற்க தகுதியுடையவர்கள். அதாவது 17 வயது முதல் 20 வயதிற்கு உட்பட்ட திருமணம் ஆகாத இளைஞர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
விண்ணப்பத்தாரர் மத்திய, மாநில அல்லது யூனியன் பிரதேசங்களால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் இருந்து ஏதேனும் ஒரு பிரிவில் 10வது, பிளஸ் 2 அல்லது அதற்கு சமமான தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் எனவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் என்ஜினீயரிங் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கணினி அறிவியல், இன்ஸ்ட்ருமென்டேஷன் டெக்னாலஜி அல்லது தகவல் தொழில்நுட்பம்) பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே விருப்பம் உள்ளவர்கள் இந்த ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.