

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, நேற்று முதன்முறையாக தலைநகர் டெல்லிக்கு அரசு முறைப் பயணமாக சென்றிருந்தார். நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து தமிழகத்திற்கான கோரிக்கைகளை முன் வைத்தார் முதல்வர் விஜய்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க இருந்த சூழலில், நேரம் ஒதுக்காத காரணத்தால் முதல்வரால் அவரை சந்திக்க முடியாமல் போனது. மேலும் இன்று காங்கிரஸ் மூத்த தலைவரான சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும் இன்று மாலை ராகுல் காந்தியின் இல்லத்தில் தமிழக முதல்வர் விஜய்க்கு விருந்து அளிக்கப்படுவதாக இருந்தது.
இந்நிலையில் அவசர வேலை காரணமாக காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்திக்காமலேயே தற்போது விஜய் தமிழகத்திற்கு புறப்பட்டுள்ளார். டெல்லியில் இருந்து தமிழக முதல்வர் விஜய் புறப்படுவதற்கு முன்பு மூத்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
முதல்வராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக டெல்லிக்கு சென்ற முதல்வர் விஜய், ஆட்சி அமைக்க ஆதரவாக இருந்த காங்கிரஸ் தலைவர்களை சந்திக்காமல் சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மை இல்லாத சமயத்தில், முதல் கட்சியாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு 5 எம்எல்ஏக்களின் ஆதரவை அளித்தது காங்கிரஸ். அதற்கு பிரதிபலனாக தமிழக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு இரண்டு இடங்களையும் தவெக வழங்கியது. இதன் மூலம் கடந்த 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றது காங்கிரஸ்.
இப்படியான சூழலில் முதன்முறையாக டெல்லிக்கு சென்ற போதிலும், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திக்காமல் சென்றிருப்பது ஏன் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.
நேற்று டெல்லி சென்ற முதல்வர் விஜய், அங்கு பத்திரிகையாளர்களை சந்திக்காமல் சென்றார். அதோடு இன்று டெல்லியில் உள்ள தமிழக இல்லத்திலிருந்து, புறப்படும் போதும் முதல்வர் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை.
பத்திரிகையாளர்கள் முதல்வர் விஜய்யை அழைத்த போது, வணக்கம் வைத்து விட்டு அமைதியாக சென்று விட்டார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழக முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரை பத்திரிகையாளர்களை சந்தித்து பேசவில்லை.
முதல்வர் விஜய் தொடர்ந்து பத்திரிகையாளர்களை புறக்கணித்து வருவதற்கான காரணமும் இன்னும் வெளியாகவில்லை.
பொது மக்களுக்கும், அரசுக்கும் இடையே பாலமாக திகழும் பத்திரிக்கையாளர்களை முதல்வர் விஜய் தொடர்ந்து புறக்கணித்து வருவது பேசுபொருளாக மாறியுள்ளது. இப்போது மட்டுமல்ல தேர்தலுக்கு முன்பாக பிரச்சாரத்தின் போதும், முதல்வர் விஜய் பத்திரிகையாளர்களை புறக்கணித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணத்தை முடித்துக் கொண்டு, டெல்லியில் இருந்து தற்போது தமிழகம் புறப்பட்டு உள்ளார் முதல்வர் விஜய். தமிழகம் வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கையாக சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார்.