

தமிழ்நாட்டில் தொழில்துறையை வலுப்படுத்த புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான தவெக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் முதல் படியாக 21 நாட்களில் தொழில் தொடங்குவதற்கான அனுமதியை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி இனி தொழில் தொடங்க விண்ணப்பித்தவர்கள் அதிக நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒற்றை சாளர முறைப்படி வெறும் 21 நாட்களில் தொழில் தொடங்குவதற்கான தடையில்லா சான்று (NOC) கிடைத்து விடும்.
சமீபத்தில் புதுச்சேரியில் 21 நாட்களில் தொழில் தொடங்குதற்கு அனுமதி வழங்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்ற புதிய சட்டம் அமலுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலும் தொழில் தொடங்குவதற்கான அனுமதியை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒற்றை சாளர முறைப்படி இனி 21 நாட்களிலேயே புதிய தொழில் தொடங்குவதற்கான அனுமதி வழங்கப்படும் என தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா உறுதியளித்து உள்ளார். மேலும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான அனைத்து நடைமுறைகளும், தொழில்நுட்ப உதவியுடன் எளிமையாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொழில்துறை அமைச்சராக பதவியேற்ற சில நாட்களிலேயே அமைச்சர் கீர்த்தனா மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் இந்த அறிவிப்பு தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்க முன்வருபவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு ஏற்கனவே தொழில் தொடங்குவதற்கு தமிழக அரசின் அனுமதிக்காக காத்துக் கிடக்கும் தொழில்முனைவோர்களுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில் தொடங்குவதற்கான விரைவான அனுமதி மட்டுமின்றி, தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, புதிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவில் முதலீடு மற்றும் தொழில்துறையில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக மாற்ற முதல்வர் விஜய் தலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளது.
குறிப்பாக சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில், தொழில் துறையின் வளர்ச்சி உறுதி செய்யப்படும் எனவும் அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.
தொழில் தொடங்குவதற்கான விரைவான அணுகல் குறித்த தமிழக அரசின் இந்த அறிவிப்பு, தமிழ்நாட்டில் பல புதிய தொழில் முனைவோர்களை உருவாக்க வழிவகுக்கும். அதோடு, வேலையில்லா பட்டதாரிகள் பலருக்கு அதிக அளவிலான வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.
தொழில்துறையில் பின் தங்கியுள்ள தமிழக மாவட்டங்களுக்கு சிறப்பு சலுகைகள் மூலம் முன்னுரிமை அளிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.