

தமிழ் மாதங்களில் தெய்வீக மாதமாக கருதப்படும் மாதங்களில் ஒன்று ஆடி மாதம். ஆடி மாதம், ஆன்மீக வழிபாட்டிற்கு, குறிப்பாக அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் ஏற்ற மாதமாகும். அம்மன் வழிபாட்டுடன் முன்னோர் வழிபாட்டினை மேற்கொள்ள ஏற்ற மாதம் என்பதால் இது தெய்வீக அருளுடன், முன்னோர்களின் ஆசியையும் பெற்று, பலவிதமான தோஷங்கள், துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கு ஏற்ற மாதமாகவும் கருதப்படுகிறது.
2026-ஆம் ஆண்டில் ஆடி மாதம் ஜூலை 17-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி, ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி மாதம் வெள்ளிக்கிழமையிலேயே தொடங்குவது கூடுதல் சிறப்பாகக் கருதப்படுகிறது. மொத்தம் 32 நாட்கள் கொண்ட இந்த மாதம் ஆன்மிக வழிபாடுகளுக்கு மிகவும் ஏற்ற காலமாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில், அம்மன் வழிபாடு, நீர்நிலைகளுக்கு நன்றி செலுத்துதல் மற்றும் முன்னோர்களுக்கு திதி கொடுத்தல் போன்ற விசேஷங்கள் மிகச்சிறப்பாக நடைபெறுகின்றன.
ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு நாளுக்கும் தனிச்சிறப்பு இருந்தாலும், செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் மிகவும் முக்கியமானவை. குறிப்பாக இந்த மாதத்தில் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். சுமங்கலி பெண்கள் மற்றும் திருமணம் ஆகாத இளம் பெண்கள் இந்த நாட்களில் விரதம் இருந்து வீடுகளில் பூஜை செய்வது, அம்மனுக்கு கூழ் ஊற்றுதல், பொங்கல் வைத்தால் போன்ற வழிபாடுகளை மேற்கொள்வார்கள்.
தெய்வ வழிபாட்டிற்கு உகந்த மாதம் என்பதால் இந்த மாதத்தில் சுபகாரியங்கள் செய்வதை தவிர்ப்பது வழக்கமாக உள்ளது. திருமணம், நிச்சயதார்த்தம், புது வீட்டிற்கு குடியேறுதல், வளைகாப்பு, புதிய முயற்சிகள் துவங்குவது, குழந்தைகளுக்கு மொட்டை போடுவது உள்ளிட்ட காரியங்களை தவிர்க்கவேண்டும் என சாஸ்திரங்களில் சொல்லப்படகிறது. இந்த ஆண்டு ஆடி மாதத்தில் எந்தெந்த விரத நாட்கள், விசேஷங்கள் எந்த நாட்களில் வருகிறது என்பதை தெரிந்துகொள்ளலாம்.
ஆடி மாத விசேஷங்கள் : (ஆடி மாத விரத நாட்கள்)
ஜூலை 17-ந்தேதி: ஆடி மாத பிறப்பு, ஆடி வெள்ளி முதல் வாரம் - அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் நாட்கள்
ஜூலை 21-ந்தேதி: ஆடி செவ்வாய் விரதம் முதல் வாரம்
ஜூலை 24-ந்தேதி: ஆடி வெள்ளி விரதம் இரண்டாம் வாரம்.
ஜூலை 28-ந்தேதி: ஆடி செவ்வாய் விரதம் இரண்டாம் வாரம்,
ஜூலை 29-ம்தேதி: ஆடி பௌர்ணமி - பல அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் நாள், கிரிவலம் வந்தால் கீர்த்தி பெருகும்.
சங்கரன்கோவில் ஆடி தபசு - தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ள புகழ்பெற்ற சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடித்தபசு திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
ஜூலை 31-ந்தேதி: ஆடி வெள்ளி விரதம் மூன்றாம் வாரம்.
ஆகஸ்ட் 3-ந்தேதி: ஆடிப்பெருக்கு(ஆடி 18) - நதிகளில் புனித நீராடி, சுமங்கலிகள் தாலிக்கயிறு மாற்றும் நன்னாள்.
ஆகஸ்ட் 4-ந்தேதி: ஆடி செவ்வாய் விரதம் மூன்றாம் வாரம்.
ஆகஸ்ட் 6-ந்தேதி: ஆடிக் கிருத்திகை விரதம் - முருகப்பெருமானை வழிபட உகந்த நாள்.
ஆகஸ்ட் 7-ந்தேதி: ஆடி வெள்ளி நான்காம் வாரம்.
ஆகஸ்ட் 11-ந்தேதி: ஆடி செவ்வாய் விரதம் நான்காம் வாரம்
ஆகஸ்ட் 12-ம்தேதி: ஆடி அமாவாசை - முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுக்க மிகச் சிறப்பான நாள்.
ஆகஸ்ட் 14-ந்தேதி: ஆடிப்பூரம் - அம்மனுக்கு வளைகாப்பு மற்றும் ஆண்டாள் அவதார திருவிழா கொண்டாடப்படும் நாள், சந்திர தரிசனம், ஆடி வெள்ளி விரதம் ஐந்தாம் வாரம்.
ஆகஸ்ட் 17-ந்தேதி: கருட பஞ்சமி, நாக பஞ்சமி - நாக தோஷ பரிகார வழிபாடுகளுக்கு ஏற்ற நாட்களாகக் கருதப்படுகின்றன. இவ்விரு வழிபாடுகளும் நமது ஜாதகத்தில் உள்ள சர்ப்ப தோஷங்களை நீக்கி, குடும்பத்திற்கு நன்மைகளைத் தரக்கூடியவையாகும்.
இந்நாளில் நாகர் சிலைகளுக்குப் பால் அபிஷேகம் செய்தும், புற்றுள்ள கோவில்களுக்குச் சென்று நாக தேவதையை வணங்குவதும் வழக்கம்.