

உதிரி பாகங்கள் விலை உயர்வு மற்றும் வினியோக தடைகள் போன்றவற்றால் எலக்ட்ரானிக் பொருட்களின் விலை உயரும் நிலை உருவாகி இருக்கிறது.
மூலப்பொருட்கள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் கடுமையாக உயர்ந்திருப்பதன் காரணமாக, உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களின் விலையை உயர்த்தத் தயாராகி வருவதால், ஏப்ரல் 1 முதல், தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள், வாஷிங் மெஷின் மற்றும் ஏர் கண்டிஷனர்கள் போன்ற பொருட்களுக்கு நுகர்வோர் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கலாம்.
அந்த வகையில் டிவி, ஏசி, வாஷிங் மெஷின் போன்ற பொருட்கள் 7 முதல் 12 சதவீதம் வரை வருகிற ஏப்ரல் 1-ம்தேதி முதல் விலை உயரும் என ஹிசன்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி பங்கஜ் ராணா கூறியுள்ளார்.
இந்த விலை உயர்வு, ஏர் கண்டிஷனர்களுக்கு 10-12% வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், தொலைக்காட்சிகளுக்கு 5-7% வரையிலும், வாஷிங் மெஷின்கள் மற்றும் ரெஃப்ரிஜரேட்டர்களுக்கு சுமார் 7-8% வரையிலும் விலை உயரக்கூடும் என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளளது.
ஏனெனில் இந்தப் பொருட்கள் பெருமளவில் பிளாஸ்டிக் அடிப்படையிலான பாகங்களைச் சார்ந்துள்ளன. மூலப்பொருட்களின் விலை உயர்வு, விநியோகச் சங்கிலி (Supply Chain) சிக்கல்கள், கப்பல் கட்டணம் அதிகரிப்பு மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் இந்த முடிவை எடுத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிளாஸ்டிக், ரெசின்கள் மற்றும் பாலிமர்கள் போன்ற முக்கிய உள்ளீடுகளின் விலை உயர்வு, சரக்குக் கட்டணங்களின் அதிகரிப்பு மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் ரூபாயின் மதிப்பு சரிவு ஆகிய காரணிகளால், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பாதிப்பை ஏற்படுத்தி, செலவுகளை கூட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
பேக்கேஜிங்கில் பயன்படுத்தப்படும் பாலிஎதிலீன் மற்றும் பாலிபுரோப்பிலீன் போன்ற பிளாஸ்டிக்குகள், ரெசின்கள் மற்றும் பாலிமர்கள் உள்ளிட்ட கச்சா எண்ணெய் வழிப்பொருட்களின் விலைகள் கடந்த மாதத்தில் 25% வரை உயர்ந்துள்ளதாகத் தொழில்துறை நிர்வாகிகள் தெரிவித்தனர். பாலியஸ்டர் ஸ்டேபிள் ஃபைபர் விலைகளிலும் இதேபோன்ற அதிகரிப்பு காணப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சில்லறை வணிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக கூறியுள்ள அவர், ஏசிக்களின் விலை 10 முதல் 12 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றும் இதன் மூலம் ஏசி விற்பனை 20-25% வரையிலும், வாஷிங் மெஷின் விற்பனை 10-12% வரையிலும் வளரும் என பங்கஜ் ராணா தெரிவித்து உள்ளார்.
அதேபோல் ‘விலை உயர்வு தவிர்க்க முடியாதது’ என்று கோத்ரேஜ் எண்டர்பிரைசஸின் வீட்டு உபகரணங்கள் வணிகப் பிரிவுத் தலைவர் கமல் நந்தி கூறியுள்ளார். ‘நாங்கள் ஏப்ரல் மாதம் முதல் விலைகளை உயர்த்துவோம், ஒருவேளை 5-6% வரை உயர்த்தலாம்’ என்று கூறிய நந்தி, சமீபத்திய வாரங்களில் உள்ளீட்டுச் செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது கடைகளில் உள்ள பழைய கையிருப்பு (Inventory) இந்த விலையேற்றத்தை சிறிது காலத்திற்கு மறைத்தாலும், விரைவில் நுகர்வோரை இந்த விலை உயர்வு பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் ஏசி மற்றும் குளிர்சாதனப் பெட்டிகளுக்கான தேவை அதிகரித்துள்ளதும் ஒரு மறைமுகக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. மேலும் விலை உயர்வு மற்றும் சந்தை சவால்கள் இருந்தபோதிலும், வீட்டு உபயோகப் பொருட்களுக்கான தேவை வலுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.