சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க போலீஸ்காரர்களுக்கு ஏ.சி. ஹெல்மெட்!

A.C.Helmet with Police
A.C.Helmet with Policehttps://tamil.drivespark.com
Updated on

கோடை கொளுத்திக் கொண்டிருக்கிறது! தமிழ்நாட்டில் போலீஸ்காரர்கள், குறிப்பாக போக்குவரத்து போலீசார் வெயிலில் கால் கடுக்க நின்றுகொண்டு தங்கள் கடமையை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், உத்தரப்பிரதேச அரசாங்கம், லக்னௌவில் போலீஸ்காரர்களுக்கு வெயிலை சமாளிக்க ஒரு குளு குளு வழி செய்து கொடுத்திருக்கிறது. அங்கே போலீஸ்காரர்களுக்கு குளிர் சாதன வசதி கொண்ட ஹெல்மெட் வழங்கி இருக்கிறார்கள்.

லக்னௌ நகரத்தில் ஹசரத்கஞ் என்ற பகுதியில் இருக்கும் அடல் சவுக் என்ற பெயர் கொண்ட போக்குவரத்து சந்திப்பில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு உ.பி. அரசு ஏ.சி. ஹெல்மெட் வழங்கி இருக்கிறது. இந்த ஹெல்மெட்டை தலையில் அணிந்துகொண்டால், அப்போது அடிக்கும் வெயிலை விட சுமார் 10 முதல் 15 டிகிரி அளவுக்குக் குளிர்ச்சியாக இருக்குமாம்!

அது என்ன ஏ.சி. ஹெல்மெட்? அதன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

இதையும் படியுங்கள்:
வயநாடு: ராகுல் ஜெயிப்பது நிச்சயமா?
A.C.Helmet with Police

இந்த ஹெல்மெட்டில் ஒரு பேட்டரியில் இயங்கும் இயந்திரம் உள்ளது. அதுதான் ஏ.சி. ஹெல்மெட் இயங்குவதற்கான சக்தியைக் கொடுக்கிறது. இதில் பயன்படுத்தப்படும் அதிநவீன செமிகண்டக்டர்தான் ஹெல்மெட்டில் கூலிங் எபெக்ட்டைக் கொடுக்கிறது. இந்த ஹெல்மெட்டை அணிந்துகொண்டால், கண்களுக்கு மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். அதற்காக ஹெல்மெட்டின் உள்ளே இருந்து நான்கு வழிகளில்  குளிர்க்காற்று வருகிறது.  இந்த ஏ.சி. ஹெல்மெட்டின் பேட்டரியை போலீஸ்காரர்கள் தங்கள் இடுப்புப் பகுதியில் பொருத்திக்கொள்ள வேண்டும். பேட்டரி தீரும் நிலை ஏற்படும்போது, எச்சரிக்கை விளக்கு எரியும்.

வெயிலில் நின்றுகொண்டு பணியாற்றுபோது அணிந்துகொள்வதற்கு வசதியாக இந்த ஹெல்மெட்கள் வழக்கமான ஹெல்மெட்களின் எடையில் பாதி அளவே இருக்கும்படி தயாரிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாதைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் இந்த ஏ.சி. ஹெல்மெட்களைத் தயாரித்துக் கொடுத்துள்ளது.

“சுமார் ஒரு மாத காலம் பரீட்சார்த்த ரீதியில் இந்த ஏ.சி. ஹெல்மெட்கள் பயன்படுத்தப்படும். அதன் பின் அவை எந்த அளவுக்கு உபயோகமாக இருக்கின்றன என்பதைக் கண்டறிந்து, சுமார் 500 ஹெல்மெட்கள் வாங்கி பயன்படுத்தப்படும். அதேசமயம், இந்த ஏ.சி. ஹெல்மெட்டைப் பயன்படுத்துவதால் ஏதாவது உடல்நலத் தீங்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதா? என்பதும் ஆராய்ச்சி செய்யப்படும்” என்கிறது லக்னௌ போலீஸ் துறை.

logo
Kalki Online
kalkionline.com